திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சமேத சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5.30 மணிக்கு கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தத் திருவிழா 12 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இவ்விழாவைக் காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைபுரிவர்.