ETV Bharat / state

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்த சாத்தியமில்லை: சபாநாயகர் அப்பாவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 9:28 PM IST

Tirunelveli
திருநெல்வேலி

Speaker Appavu: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்கட்சியினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை

திருநெல்வேலி: வேளாண் தொழிலில் தற்போது நிலவிவரும் விவசாய பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கி வேளாண் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவாக பண்ணை இயந்திரம் ஆக்குதல் திட்டம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7,000 பவர் டில்லர் வழங்கும் நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு 77 விவசாயிகளுக்கு 64.30 லட்சம் மதிப்புள்ளான பவர் டில்லர்களை வழங்கினார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி, தற்போது வரை ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 7,000 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 77 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேல்விக்கு பதில் அளித்த அவர்; ”ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 368 பிரிவு 2-ன் படி இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், ராஜ்ய சபாவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும். அதன் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே 2016ஆம் ஆண்டு சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் அமைப்புகள் அரசியல் தலைவர்களை சந்தித்து இது குறித்து விதிமுறைகளை தெளிவாக கூறியுள்ளது. 2018இல் சட்ட ஆணையமும் அமைக்கப்பட்டு இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதை அமல்படுத்தி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் திடீரென ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மாநிலங்கவையில் எதிர்கசட்சிகளை வெளியேற்றிவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நிறைவேற்ற முயற்ச்சிப்பார்கள்.

ஆனால் ராஜ்ய சபாவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது, எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கொண்டு வருவதற்கு சாத்தியம் இல்லை. மேலும், எதிர்கட்சிகள் மிக அமைதியா இருந்து அவைகளில் கவனமாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என எண்ணுகிறேன்” என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் ”தமிழக ஆளுநர் சனாதன கொள்கையால் நாடு வளர்ச்சி பெற்று உள்ளது. அவருக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி உள்ளார்” என கூறினார்.

இதையும் படிங்க: "நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" - அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.