ETV Bharat / state

மங்கள வாத்தியம் விண்ணை முட்ட நெல்லையின் அரசி காந்திமதிக்கு திருக்கல்யாணம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 11:14 AM IST

nellaiappar temple kanthimathi amman thirukalyanam festival in tirunelveli
நெல்லையின் அரசி காந்திமதிக்கு திருக்கல்யாணம்

Nellaiappar temple Thirukalyanam: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி அம்மனுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லையின் அரசி காந்திமதிக்கு திருக்கல்யாணம்!

திருநெல்வேலி: நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ஆனித் தேரோட்டமும், அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ஆம் தேதி அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 தினங்களாகத் தினமும் காலை, மாலை என இருவேளையும் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

பின்னர், நேற்று பிற்பகல் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சாமி அம்பாளுக்குக் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றது. பின் விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும் பழமும் கொடுத்தல் எனப் பல சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி நெல்லையப்பருக்குக் காந்திமதி அம்பாளைத் தாரைவார்த்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் பக்தர் பேரவை சார்பில், திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற யானை தந்தங்கள்.. விருதுநகரில் மர்ம கும்பலை மடக்கி பிடித்த அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.