ETV Bharat / state

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற யானை தந்தங்கள்.. விருதுநகரில் மர்ம கும்பலை மடக்கி பிடித்த அதிகாரிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 8:20 AM IST

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற யானை தந்தங்கள்
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற யானை தந்தங்கள்

Elephant tusk smuggling : வெளிநாட்டிற்கு கடத்தவிருந்த 21 கிலோ எடையுடைய யானை தந்தங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விருதுநகரில் பறிமுதல் செய்தனர்.

சென்னை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (Central Revenue Intelligence Department) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை பிரிவினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் விரைந்தனர்.

அங்கு டி.ஆர்.ஐ(DRI) தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை மடக்கிப் பிடித்து அவர்கள் வைத்திருந்த இரண்டு யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். யானைத் தந்தங்களின் எடை 21.63 கிலோ எனவும் அவை பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து மூன்று பேரிடமும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த யானைத் தந்தங்களை மர்ம கும்பல் சிலர் கடத்திக் கொண்டு வந்து தங்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் இதை சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலை பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தென்காசியில் உள்ளாடை மட்டும் அணிந்து ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சி செய்த நபர் கைது!

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் சென்னை புறநகரில் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த யானைத் தந்தமும் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக தென் மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. யானைத் தந்தங்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்கு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து யானை தந்தங்கள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டால், அந்த யானை தந்தங்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் எனவே யானை தந்தங்கள் வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்கு முன்பதாகவே தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ராகிங் கொடூரம்.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 சீனியர் மாணவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.