ETV Bharat / state

கல்குவாரியில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் - நெல்லை மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : May 16, 2022, 7:01 AM IST

நெல்லை கல்குவாரியில் சிக்கியுள்ள எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்குப் புறம்பாக கல்குவாரி இயங்கியதா? நெல்லை குவாரி விபத்தில் மாவட்ட ஆட்சியர் பேட்டி!
சட்டத்துக்குப் புறம்பாக கல்குவாரி இயங்கியதா? நெல்லை குவாரி விபத்தில் மாவட்ட ஆட்சியர் பேட்டி!

நெல்லை : முன்னீர் பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் வெங்கடேஷ்வரா என்ற தனியார் குவாரி இயங்கி வருகிறது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த கல் குவாரியில், நாள்தோறும் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் 300 அடி ஆழம் கொண்ட குவாரிக்கு அடியில் கற்களை அள்ளும் பணியில் லாரி டிரைவர்கள் செல்வகுமார் ராஜேந்திரன் கிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் செல்வம் முருகன் விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலே இருந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால் கற்களின் இடிபாடுகளுக்குள் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து பாளையங்கோட்டை நாங்குநேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆறு பேரில் முருகன் மற்றும் விஜய் உள்ளிட்ட ஆகிய 3 பேர் நேற்று தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தார். எஞ்சிய 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குவாரியை சுற்றியுள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் கூடுதலாக வீரர்களை களமிறக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை சரக டிஜஜி ஆகிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்திய கப்பற்படையிடமிருந்து உதவி கேட்கபட்டு ஐஎன்எஸ் பருந்து என்ற ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டது. ஆனால் சிக்கலான பகுதி என்பதால் தங்களால் முடியாது என ஹெலிகாப்டர் திரும்பி சென்று விட்டது. தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொன்னாகுடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குவாரி குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்தபோது காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரி என்பதும், அதே சமயம் ஆவணப்படி சங்கரநாராயணன் என்பவரின் பெயரில் இந்த குவாரி லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சங்கர நாராயணனை கைது செய்தனர். மேலும் செல்வராஜிடமும் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குவாரியில் கற்கள் அள்ளுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிகாலை 12.30 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் ஆறு நபர்கள் மாட்டி கொண்டனர். நிலச்சரிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டது. பாறைகளில் சிக்கியுள்ள எஞ்சியவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. கப்பற்படை ஹெலிகாப்டர் மூலம் முயற்சி எடுத்தோம்.

30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால் மீட்பு பணியில் சிரமம் உள்ளது. மருத்துவ குழுவினரும் வர உள்ளனர். வல்லூநர்களிடமும் ஆலோசனை பெற்று வருகிறோம். லைசென்ஸ் உரிமதாரர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான உரிமையாளர் குறித்து விசாரித்து வருகிறோம்.

கடந்த ஏழு மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள 6 குவாரிகளை மூடியுள்ளோம். இது ஒரு தேசிய பேரிடர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது 2018ல் இருந்து இயங்கி கொண்டிருக்கிறது அனுமதி அளித்த அளவை விட கூடுதலாக தோண்டப்பட்டுள்ளதா? என விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : கண்முன்னே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர்... செய்வதறியாது தவிக்கும் மீட்புப்பணியினர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.