ETV Bharat / state

திருநெல்வேலியில் வெள்ளத்தில் காணாமல் போன மகன் சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 1:00 PM IST

திருநெல்வேலியில் வெள்ளத்தில் காணாமல் போன மகன் சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி
திருநெல்வேலியில் வெள்ளத்தில் காணாமல் போன மகன் சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி

Nellai news: திருநெல்வேலியில் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மகனை, அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலியில் வெள்ளத்தில் காணாமல் போன மகன் சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி

திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி உள்பட 4 தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் நகர் பகுதியில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் சென்றதால் வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, திருநெல்வேலி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சேர்மன் ஆறுமுகக்கனி தம்பதியின் மகன் அருணாச்சலம் (19) என்ற இளைஞர், கடந்த 17ஆம் தேதி தனது பைக்கில் என்ஜிஓபி காலனி வழியாகச் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள குளம் ஒன்று நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலை ஓரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீர் சென்றது தெரியாமல், அருணாச்சலம் அந்த ஓடைக்குள் வெள்ளத்தில் பைக் உடன் சென்றதில் சிக்கிக் கொண்டுள்ளார்.

அதேநேரம், வீட்டில் இருந்து சென்ற அருணாச்சலம் குறித்து தகவல் தெரியாமல் அவரது தாய் கடந்த இரண்டு நாட்களாக பரிதவித்து வந்துள்ளார். மேலும் அவரது மகனை தேடுவது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது போன்ற சூழ்நிலையில், என்ஜிஓபி காலனி அருகே உள்ள ஓடையில் இன்று அருணாச்சலம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை அருணாச்சலத்தின் பைக் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் நெல்லையில் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லை கனமழை வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு.. மாவட்டம் முழுவதும் 70,000 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.