ETV Bharat / state

தனி ரூட்டில் பயணித்த மத்திய வனத்துறை அதிகாரிகளுக்கு செக் வைத்த நெல்லை ஆட்சியர்... நடந்தது என்ன?

author img

By

Published : Aug 11, 2023, 4:18 PM IST

Etv Bharat
Etv Bharat

சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனி ரூட்டில் பயணித்த மத்திய வனத்துறை அதிகாரிகளுக்கு செக் வைத்த நெல்லை ஆட்சியர்

திருநெல்வேலி: பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் திருக்கோயில். பாபநாசம் நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ., மலைப்பகுதியில் பயணம் செய்து இந்த கோயிலை அடையலாம். வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி இந்த கோயிலை தழுவி செல்கிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர் இந்த கோயிலை நிர்வகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா இங்கு மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி அமாவாசை அன்று இக்கோயிலில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது மக்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

எனவே ஆடி அமாவாசை திருவிழாவில் திருநெல்வேலி மற்றும் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வருவார்கள். குறிப்பாக திருவிழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பொதுமக்கள் குடும்பத்தோடு இங்கு வந்து கோயில் அருகே குடில் அமைத்து தங்கி இறைவனை வழிபடுவார்கள்.

ஆற்றங்கரை ஓரம் ஓலைக் குடில்கள் அமைத்து ஐந்து நாட்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, ஆற்றில் குளியல், இறை வழிபாடு, கிடா விருந்து என ஆடி அமாவாசை திருவிழாவின் அனுபவம் பொதுமக்களுக்கு ஒரு வித உற்சாகத்தை கொடுக்கும். ஆடி அமாவாசை அன்று ஆடுகளை பலி கொடுப்பது உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்வார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர்.

ஜமீன் குடும்பத்தின் கடைசி வாரிசுதாரரான முருகதாஸ் தீர்த்தபதி சமீபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை ஆண்டு தோறும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஜமீன் உடை அணிந்தபடி கோயிலுக்கு வருவார். குறிப்பாக இக்கோயிலில் சங்கிலி பூதத்தார் சன்னதி முன்பு சாமியார் சங்கிலியால் அடித்துக் கொள்ளும் நிகழ்வு மிகவும் பாரம்பரியமாக கருதப்படுகிறது.

இது போன்று ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு வந்து குடில் அமைக்கும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. கோயில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானது என்றாலும் கோயில் அமைந்துள்ள பகுதி திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. எனவே கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

குறிப்பாக திருவிழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டுமே பக்தர்கள் வர வேண்டும். தனியார் வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இந்த ஆண்டு வரும் 16ஆம் தேதி சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வனத்துறை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் 13, 14ஆம் தேதி இரண்டு நாட்கள் பாபநாசம் வன சோதனை சாவடி இழுத்து மூடப்படும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவிட்டார். இதை கேள்விப்பட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி கொடுத்தால் தான் குடில்கள் அமைப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது முதல் தாங்கள் நேர்த்திக்கடன் செய்வதற்கான பொருட்களை கொண்டு செல்ல முடியும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி என்று வனத்துறை திட்டவட்டமாக தெரிவித்ததால் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கினர். குறிப்பாக துணை இயக்குனர் செண்பகப்பிரியா பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் பிற பொதுமக்களிடமும் கடுமையான நடவடிக்கையை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அவர் மீது பொதுமக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இது போன்ற சூழ்நிலையில் கோயிலுக்கு கட்டுப்பாடு விதித்ததை கண்டித்து சமூக வலைதளங்களில் துணை இயக்குனர் குறித்து சில பதிவுகள் வைரலானது. அதில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் அமைந்துள்ள தெய்வங்களை விட துணை இயக்குனர் செண்பகப்பிரியா அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். எனவே இந்த ஆண்டு கோயிலில் பொங்கல் வைப்பதற்கு பதிலாக துணை இயக்குனர் வீட்டு முன்பு பொங்கல் வைத்து வழிபடுவோம் என்று அழைப்பு விடுத்து பதிவுகளை பகிர்ந்தனர்.

அதேபோல் திட்டமிட்டபடி துணை இயக்குனர் வீட்டு முன்பு பொங்கல் வைக்க சில அமைப்புகளும் தங்களை தயார்படுத்தியது இதனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவில் பெரும் பிரச்சனை ஏற்படும் சூழல் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவானது. இதற்கிடையில் இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியரை பொறுத்தவரை எப்போதும் போல் பக்தர்கள் திருவிழாவை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனவே இந்த விஷயம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு மேல் தங்கி இருந்தால் மாசு ஏற்பட்டு வன விலங்குகள் பாதிக்கப்படும் என 2018ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதை காரணம் காட்டியே துணை இயக்குனர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுத்ததாகவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டது.

அதே சமயம் வனத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் சரிவர கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதும் வெட்ட வெளிச்சமானது. இதனால் கடும் கோபத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பக்தர்களுக்கு அனுமதி வாங்கி கொடுப்பது விஷயமாக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இது போன்ற சூழ்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தரப்பில் வெளியான அறிக்கையில், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு ஐந்து நாள்கள் அனுமதி அளிக்கப்படும் அதே சமயம் சில கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பை கேள்விப்பட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வனத்துறையின் தன்னிச்சை போக்கு காரணமாக பாபநாசம் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் அளவுக்கு போராட்டங்கள் நடைபெறும் சூழல் நிலவியது. குறிப்பாக பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களை வனத்துறையினர் மாற்ற நினைப்பதாக பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஆட்சியர் கார்த்திகேயன் உங்கள் இஷ்டத்திற்கு முடிவெடுக்காதீர்கள், நாளைக்கு ஏதாவது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் நான் தான் அரசுக்குக்கு பதில் சொல்ல வேண்டும். எனவே இது போன்ற விஷயங்களில் உரிய ஆலோசனைக்கு பிறகு முடிவெடுங்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ”இந்த விவகாரம் தொடர்பாக முதலில் வனத்துறை எங்களிடம் ஆலோசனை செய்தனர். ஆனால் பின்னர் அவசர அவசரமாக மூன்று நாள் மட்டும் அனுமதி கொடுத்து அறிவிப்பு வெளியிட்டனர். 2018ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணையை காரணம் காட்டி வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது. மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணையை புதுப்பிக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன் மேலும் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் பேசி தற்போது ஐந்து நாட்கள் பக்தர்கள் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் வனப்பகுதி என்பதால் நாங்கள் சொல்வது தான் சரி என்ற போக்கில் நடந்து கொண்டதும், அதே சமயம் வனப் பகுதியாக இருந்தாலும் அது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டத்தின் ஒரு பகுதியே என்பதை நிரூபிக்கும் வகையில் ஆட்சியர் நடந்து கொண்ட விதமும் வனத்துறை அதிகாரிகளை வாய் அடைக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவிகள் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.