ETV Bharat / state

நெல்லை மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 12:25 PM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு

Central team in Nellai: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.

திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்தது.

இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து, ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தென்மாவட்டங்களில் மழைநீர் வடியத் தொடங்கிய நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சகம் ஆர்.தங்கமணி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகிய 5 பேர் கொண்ட குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று மத்திய குழு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

இதையும் படிங்க: தாமிரபரணி வெள்ளம்.. விமானப்படை, கடற்படையினர் மீட்புப் பணியில் தீவிரம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.