ETV Bharat / bharat

தாமிரபரணி வெள்ளம்.. விமானப்படை, கடற்படையினர் மீட்புப் பணியில் தீவிரம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

author img

By ANI

Published : Dec 20, 2023, 2:56 PM IST

நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் விமானப்படையினர்
நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் விமானப்படையினர்

IAF helicopters: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிக்காக மத்திய அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் விமானப்படையினர்

டெல்லி: தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் சிக்கியுள்ள பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கனமழையின்போது, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட செந்தூர் அதிவிரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்த பயணிகள் ரயிலில் சிக்கி இருந்தனர். அம்மக்களை மீட்க மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகள், இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

மேலும், மதுரை விமான நிலையத்தில் மாநில அரசால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள், இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டது. அந்த நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சென்னை மண்டல பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடற்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி இருந்த பயணிகளுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள் உள்பட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 8 பேர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்குச் சென்றடைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தென்னக ரயில்வேவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க 13 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், மீட்ட பயணிகள் அனைவரையும் வாஞ்சி மணியாச்சி அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து மருத்துவ வசதி, உணவு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் சென்னை எழும்பூருக்கு அனுப்பப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசியில் அதி கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மீட்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நெல்லை கனமழை வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு.. மாவட்டம் முழுவதும் 70,000 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.