ETV Bharat / state

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம் - நெல்லையில் சபாநாயகர் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 2:20 PM IST

Tamil Nadu Legislative Assembly Speaker: திருநெல்வேலி மாவட்டத்தில், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்கு 445 கன அடி தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்து, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

Tamil Nadu Legislative Assembly Speaker
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம்

சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 160 சதவீதம் பெய்துள்ளது. ஜனவரி மாதமும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்கு 445 கனஅடி தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , “அரசின் உத்தரவுபடி பெருங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வினாடிக்கு 445 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 82 நாட்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். கடந்த மாதம் ஏற்பட்ட கனமழையால் 358 குளங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உடைப்பு ஏற்பட்டது. அந்த குளங்களில் ஏற்பட்ட உடைப்புகள் தற்காலிகமாக 100 சதவீதம் சரி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், குளங்களுக்கு தண்ணீரை அனுப்பி நிரப்புவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு இணைப்புத் திட்டத்தில் விமல் தேடி பகுதியில் நில எடுப்பு தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவை நீங்கலாக, பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

தமிழகத்தில் 6 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் குஜராத்தில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தை விட குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் முதலீடுகள் அதிகமாக உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு இது போன்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மத்திய அரசு ஒரு ரூபாய் கூட பணம் தராத நிலையிலும், மிக்ஜாம் புயல் தென் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரமும், பாதிப்பு குறைந்தவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசோடு தமிழக அரசு இணக்கமாகவே செயல்படுகிறது. பிரதமர் வருகை, மத்திய அமைச்சர்கள் வருகையின்போது அவர்களுக்கு உரிய மரியாதை தமிழக அரசால் அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பேருந்துகள் சகஜமாக இயங்குவதாக கூறுவது உண்மையில்லை - சிஐடியு சவுந்தரராஜன் கடும் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.