ETV Bharat / state

திருநெல்வேலி வழியாக செல்லும் 11 நாள் சுற்றுலா ரயில் - ஐஆர்சிடிசி அறிவிப்பு

author img

By

Published : Jun 9, 2023, 8:20 AM IST

திருநெல்வேலி வழியாக செல்லும் 11 நாள் சுற்றுலா ரயில் : ஐஆர்சிடிசி அறிவுப்பு
திருநெல்வேலி வழியாக செல்லும் 11 நாள் சுற்றுலா ரயில் : ஐஆர்சிடிசி அறிவுப்பு

ஐஆர்சிடிசியில் இருந்து டெல்லி வரை செல்லும் பிரத்யேக சுற்றுலா ரயில் முதல் முறையாக திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி: இந்தியன் ரயில்வேயின் அங்கமான ஐஆர்சிடிசி, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் மண்டல ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐஆர்சிடிசி தெற்கு மண்டலம் சார்பில் கேரள மாநிலம் கொச்சி வேலியில் இருந்து டெல்லி வரை வைஷ்ணவ தேவி யாத்திரை என்ற பெயரில் பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 12ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள், 12 இரவுகள் என இந்த ரயிலில் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசி தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் திருநெல்வேலியில் நேற்று (ஜூன் 8) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்த சிறப்பு ரயில் கொச்சிவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஹைதராபாத் செல்லும். மேலும், ஹைதராபாத்தில் சார்மினார் ராமானுஜர் சிலை ஆகிய இடங்களைச் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரயில் ஆக்ரா சென்றடைந்து, ஆக்ராவில் தாஜ்மஹாலைச் சுற்றி பார்க்க எற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில், அமிர்தசரஸ் வாகா எல்லை பொற்கோயில், டெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், செங்கோட்டை இந்திரா அருங்காட்சியகம், தாமரை கோயில் போன்ற இடங்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த ரயிலில் மூன்று குளிர்சாதன பெட்டிகள், எட்டு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் இரண்டு பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.22,350, ஏசி பெட்டியில் ரூ.40,380 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்குச் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.21,010, ஏசி பெட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.38,490 கட்டணம் வசூலிக்கப்படும் என நிர்ணையித்துள்ளது. பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் சென்னை, மதுரை போன்ற ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுண்டர்களிலும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

முக்கிய அம்சமாக சுற்றுலா செல்லும் இடங்களில் ஏசி மற்றும் ஏசி இல்லாத தங்கும் இடம், சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி (ஏசி அல்லது ஏசி அல்லாத), ரயிலில் உணவு வசதி மற்றும் பாதுகாவலர்கள் வசதி போன்றவை ரயில் கட்டணத்திற்குள் செய்து கொடுக்கப்படும்.

இதற்கான தனிக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதிகளவு எண்ணிக்கையில் ஒரே குடும்பமாக வந்தால் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இதுவரை 60 சதவீதம் முன்பதிவு முடிந்து விட்டது. திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் முதல் சுற்றுலா ரயில் இதுதான்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு; கன்னியாகுமரியில் பாஜக உறுப்பினர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.