ETV Bharat / state

’அவனது படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்’ - நீட் தேர்வில் வென்ற மாணவனின் தந்தை கோரிக்கை

author img

By

Published : Oct 18, 2020, 9:30 AM IST

theni-student-jivithkumar-
ஜீவித்குமார்

தேனி: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர் தரவரிசையில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அவரது படிப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அம்மாணவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் வசித்துவருகின்றனர் நாரயணமூர்த்தி (47) - பரமேஸ்வரி தம்பதியினர். நாராயணமூர்த்தி ஆடு மேய்ப்பவர், இவரது மனைவி பரமேஸ்வரி நூறு நாள் வேலைக்குச் செல்பவர். இத்தம்பதியினருக்கு சர்மிளாதேவி (20), ஜீவித்குமார்(19), தீபன்(15) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கூலி வேலைக்குச் செல்லும் இவர்களுக்கு மூவரையும் படிக்கவைப்பது பெரும்பாடாக உள்ளது. இந்நிலையில், ஜீவித்குமார் மருத்துவம் படிக்க முடிவு செய்தார். இவர் சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கடந்தாண்டு 548 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்தார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்தவர்களின் கதை ஜீவித்குமாரை அதன் பக்கம் இழுத்தது. அந்தத் தேர்வு அவ்வளவு கடினமானதா என்ன? என்ற எண்ணத்தில் முதல் முறை அந்தத் தேர்வை எழுதியிருக்கிறார். அப்போது 193 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆனாலும், ஜீவித் தன்னம்பிக்கையை விடவில்லை. அவருடைய ஆர்வத்தைக் கண்ட வகுப்பாசிரியர் அருள்முருகன், இது குறித்து நீட் தேர்வுக்கு எதிராக அரசுப் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தலைமையாசிரியர் மோகன், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் உதவியுடன் ஜீவித் சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.

தொடர்ந்து ஓராண்டு தமிழ் வழியில் பயிற்சி மேற்கொண்ட ஜீவித்குமார், ஆங்கிலத்தில் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இந்தாண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜீவித்குமாரின் வெற்றியானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும்.

ஜீவித் உடைய வெற்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரி எனக் கூறும் ஆசிரியர் அருள்முருகன், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தேசியக் கல்வி பாடத்திட்டத்தை தமிழ் வழியில் மாணவர்களுக்குத் கற்றுத்தர வேண்டும். இதனால் வருங்காலத்தில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது சுலபமாக அமையும் என்கிறார்.

ஜீவித் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவன். பள்ளிப் படிப்பிற்கும் பின்னர் பயிற்சி மையத்திற்கும் பிறர் உதவினர். ஆனால் மேற்கொண்டு படிக்க போதுமான பொருளாதார வசதியில்லை என வேதனை கலந்த குரலுடன் தெரிவிக்கிறார் ஜீவித்தின் தந்தை.

தனது பரம்பரையில் முதல் மருத்துவராக இருக்கும் மகன் குறித்து ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், 5 முதல் 7 ஆண்டுகள் மருத்துவம் படிக்க வைப்பதற்காக பொருளாதார வசதி இல்லை எனத் தெரிவிக்கிறார் நாராயணமூர்த்தி. ஜீவித்குமாரின் ஏழ்மை நிலையைப் புரிந்து கொண்டு அரசு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பதுதான் ஜீவித் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

ஜீவித்குமாருடன் சில வார்த்தைகள்

”மருத்துவராக வேண்டும் என முயற்சி செய்கிற மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் இருந்தே நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களால் முடியாது என எதுவும் கிடையாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவது எளிதாக இருக்கும். என்னுடைய இயற்பியல் ஆசிரியர் தான் எனக்கு உந்துதலாக இருந்தார்.

நீட் தேர்வு எழுந்துங்கள். ஒருமுறை முயன்று முடியவில்லை என்றால் மறுமுறை முயற்சி செய்யுங்கள். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் அழுத்தம் கொடுக்காமல் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னாலே போதும். மனரீதியான அழுத்தம் குறைந்து வெற்றி பெற்று விடுவார்கள்” என்கிறார் ஜீவித்.

நீட் தேர்வில் வென்ற மாணவனின் கதை

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும் நீட் போன்ற எத்தகைய கடினமான தேர்வுகளையும் எதிர் கொண்டு வெற்றி அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும் மாணவர் ஜீவித்குமார் பாராட்டுக்குரியவரே.

இதையும் படிங்க:ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.