ETV Bharat / state

தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்: சென்னைக்கும் ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

author img

By

Published : May 26, 2022, 3:50 PM IST

தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்
தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்

தேனி - மதுரை ரயில் சேவை 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாளை (மே 27) முதல் தொடங்கவுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் ரயில்கள் இயக்க ரயில்வே துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி: போடியில் இருந்து வணிக நோக்கத்திற்காக இயக்கப்பட்டு வந்தது, மதுரை - போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை. போடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கேரளப் பகுதிகளில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி, தேயிலை, இலவம் பஞ்சு ஆகியவைகளை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்காகவும் உள்ளூர் பயணிகளுக்காகவும் இந்த ரயில்பாதை செயல்பட்டு வந்தது.

'மீட்டர் கேஜ்' ரயில் பாதை திட்டத்திற்குப் பதிலாக அகல ரயில் பாதை திட்டமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கபட்டது. பின்னர், ரயில் சேவை 2010ஆம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் சேவை நிறுத்தப்பட்டு, தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. 2015ஆம் ஆண்டில் பணிகள் முடிவடையும் எனக் கூறப்பட்டது.

ரயில் சேவையே இல்லாத மாவட்டமாக இருந்த தேனி: ஆனால், நிதிப் பற்றாக்குறையால் மற்றம் பணி தாமதத்தால் ரயில் சேவை தேனி மாவட்டத்திற்கு கிடைக்காமல் ஆண்டுகள் கடந்து கொண்டே போனது. இதனால் தமிழ்நாட்டில் ரயில் சேவையே இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் மாறும் நிலை ஏற்பட்டது. பின்னர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் சார்பாகவும் பல கட்டப்போராட்டங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு, பின்னர் மதுரை - தேனி வரையிலான பணிகள் வேகம் எடுத்து முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்

இந்த சோதனை ஓட்டத்தைக் காண, தேனியில் ரயில் செல்லும் வழிகளில், பொதுமக்கள் கூடி ஆர்வமாக தேனி மாவட்டத்திற்குள் ரயில் இன்ஜின் செல்லும் காட்சியைப் பல ஆண்டுகள் கழித்து கண்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில் இன்று மதுரை – தேனி இடையிலான ரயில் சேவையினை பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கவுள்ளார். நாளை முதல் தேனி - மதுரை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படயிருக்கிறது.

மீண்டும் ரயில் சேவை - தேனி மக்கள் பூரிப்பு : பல ஆண்டுகளாக ரயில் சேவையினை எதிர்பார்த்து, காத்துக் கிடந்த தேனி மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் சேவை தொடக்கம் பற்றிய அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியினைக் கொடுத்துள்ளது. தற்போது தொடங்கவுள்ள மதுரை – தேனி இடையிலான ரயில் சேவையினை விரைவில் தேனியில் இருந்து சென்னை – பெங்களூரூ வரையிலும் தொடங்க வேண்டும் எனவும்; அப்போது தான் தேனி மாவட்ட மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்கின்றனர், தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

ரயில்சேவையினை நீட்டிக்கவேண்டும்: தேனி மாவட்டத்தில் இருந்து சராசரியாக நாள்தோறும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆம்னி பேருந்தின் மூலமாகவும், திண்டுக்கல், மதுரை சென்று அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்கிறார்கள். தேனியில் இருந்து தொலைதூரங்களுக்குச் செல்லும் வகையில் ரயில் சேவையினை விரிவுபடுத்த வேண்டும் என்கின்றனர், தேனி மக்கள்.

இதையும் படிங்க: பூவரசம் பூ பூத்தாச்சு...மீண்டும் கிழக்கே போகும் ரயில்: தேனி-மதுரை ரயில் சேவையின் சிறப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.