Theni Vadugapatti clashes:பொங்கலா..போர்க்களமா? கற்களை வீசித் தாக்குதல்; தேனி வடுகபட்டியில் குவிக்கப்பட்ட போலீஸார்

author img

By

Published : Jan 17, 2023, 7:36 PM IST

Etv Bharat

Theni Vadugapatti clashes:தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சியில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரிலும் 10-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க அப்பகுதியில் 200-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Theni Vadugapatti clashes:பொங்கலா..போர்க்களமா? கற்களை வீசித் தாக்குதல்; தேனி வடுகபட்டியில் குவிக்கப்பட்ட போலீஸார்

Theni Vadugapatti clashes: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பகவதி அம்மன் கோயில் தெருவில் நேற்று மாலை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதற்காக அந்த சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு சாலையில் குறுக்கே சிலர் கயிறுகள் கட்டியிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்தை தடை செய்து கட்டப்பட்டிருந்த கயிற்றை அப்புறப்படுத்தும்படி கூறியபோது, இரண்டு தாப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இருசமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அசாதாரணமான நிலைமை ஏற்பட்டதால் நேற்று இரவு முதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜன.17) காலையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டபோது, சாலையில் கயிறு கட்டிய சமூகத்தினரை கைது செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இரு சமூகத்தினரும் மாறிமாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால், சம்பவ இடத்தில் பெரியகுளம், போடி, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விரைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டனர்.

முன்னதாக, கற்களை எறிந்து தாக்கிக்கொண்ட இரு சமூகத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் கலவரம் ஏற்படாதவாறு காவல்துறையினரை தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் விழாவின்போது, இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்து இரு சமூகத்தினரும் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'தேநீருக்கு இரட்டைக்குவளை கூடாதெனில், குடிநீருக்கும் இரட்டைத் தொட்டி கூடாது' - திருமாவளவன் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.