தேனி: கம்பம் அடுத்த பாரதியார் நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்த மணிவாசகம் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகன் பரத்குமார்(18). வீரபாண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், இளங்கலை வணிகவியல் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி பரத்குமார், கல்லூரி வகுப்பு முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் கம்பம் நோக்கி வந்துள்ளார்.
உத்தமபாளையத்தை கடந்து கோவிந்தன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையின் இடது புறத்தில் இருந்து வந்த கே.கே.பட்டியைச் சேர்ந்த ராம்குமார்(22) என்பவர் வந்த இருசக்கர வாகனமும், பரத்குமார் வந்த வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில், பரத்குமார் படுகாயமடைந்தார்.
அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த பரத்குமாரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.27) அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். பரத்குமார் இறப்பதற்கு முன்பாக, தான் இறந்து விட்டால் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி விடுமாறு கூறியதை அடுத்து, பரத்குமாரின் பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி, பரத்குமாரில் இதயம் சென்னை ரேலா மருத்துவமனைக்கும், அவரது நுரையீரல்கள் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் தஞ்சை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கும், கல்லீரல் திருச்சி கே.எம்.சி மருத்துவமனைக்கும் பரத்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் உடனடியாக அனுப்பி வைக்கபட்டது.
பின்னர் பரத்குமாரின் உடல் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கும் கொண்டுவரப்பட்டது. அங்கு அவருடைய நண்பர்கள், உறவினர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானவர்கள் பரத்குமாரில் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகம் நிலவியது.
அதனைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என அரசின் அறிவிப்பின் படி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பால்பாண்டியன், காவல் ஆய்வாளர் கே.சிலைமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள எரியட்டும் தகனமேடையில் எரியூட்டப்பட்டது.
இதையும் படிங்க: மாலத்தீவில் சிக்கியுள்ள தூத்துக்குடி மீனவர்கள்.. தருவைகுளம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்.. பின்னணி என்ன?