ETV Bharat / state

சுதந்திர தின விழா மேடையில் ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்படாதது ஏன்?

author img

By

Published : Aug 15, 2023, 1:21 PM IST

Independence day
சுதந்திர தின விழா

தேனியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் மேடையில் ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்படாதது தற்போது பேசுப் பொருளாகி வருகிறது.

சுதந்திர தின விழாவின் மேடையில் ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்படாதது தற்போது பேசுப் பொருளாகி வருகிறது

தேனி: இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தலைநகரங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி சஜீவனா பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக விழா மேடை அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களான சரவணகுமார் (பெரியகுளம்), கம்பம் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோருக்கு மட்டும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் மட்டும் பங்கேற்ற நிலையில், ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்காத போதும் அவர்களுக்கு மேடையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து நிகழ்ச்சி தேனி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்திடம் விளக்கம் கேட்ட போது, "ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என்று கூறியதால் தான் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை" என மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Independence Day 2023: "நேஷன் ஃபர்ஸ்ட்.. ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்" - புதுவிதமாக தேசப்பற்றை வெளிப்படுத்திய குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.