ETV Bharat / state

தேனியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் கடன் மோசடி..? வங்கியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 10:30 PM IST

தேனியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் கடன் தொகையை மோசடி செய்ததாக எழுந்த புகாரில் வங்கியை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
magalir loan scam
magalir loan scam

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் 10 மகளிர் சுய உதவி குழுக்களை ஆரம்பித்தனர். அதன்பின் தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில் மகளிர் திட்ட அதிகாரிகள் எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தல 5 லட்ச ரூபாய் விதம் 50 லட்ச ரூபாய் கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்பொழுது 10 குழுக்களைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட பெண்களுக்கு கடன் வழங்காமல் மொத்தமாக 50 லட்ச ரூபாயை பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் வென்னிஸ் கிறிஸ்டி, சசி ஆகிய இருவர் மூலம் திட்ட அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 50க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் லட்சுமிபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், 50 லட்ச ரூபாய் கடன் தொகை மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கியை முற்றுகையிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: "ஃபாலோ டிராஃபிக் ரூல்ஸ்" - பறிமுதல் கார்களை கொண்டு நூதன விழிப்புணர்வு செய்த மதுரை காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.