ETV Bharat / state

தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு

author img

By

Published : May 25, 2023, 5:59 PM IST

DGP Sylendra babu
டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு காவல்துறையில் முதன்முறையாக காவலர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

உதகை: தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர்களின் நிலை குறித்த சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (மே 25) தொடங்கியது. இதனை தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உதகை பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, "பழங்குடியினர் வாழ்வியல் முறையில் சிறு வயது திருமணம் காலகாலமாக நடக்கும் நடைமுறையாக உள்ளது. இதனால் அவர்களது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் சூழல் உள்ளது. குழந்தை திருமணத்தை அரசு ஒருபோதும் ஏற்காது" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து நகர மத்திய காவல் நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் இருந்தும், 9 மாநகராட்சிகளை சேர்ந்த 40 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 1.2% பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பழங்குடியினர்கள் மீது தாக்குதல் நடத்திய 75 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் பழங்குடியினர்களின் 2,600 சாதி சான்றிதழ்களை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு நடத்தி சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை பழங்குடியின மக்களுக்கு சென்றடைய காவல்துறையினர் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு காவல்துறையில் புதிதாக 10,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, தற்போது 3,500 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், பழங்குடியினர்களின் போலிச் சான்றிதழ்கள் மூலம் கல்லூரி மற்றும் அரசு வேலைகளில் முறைகேடாக சேரும் நபர்களை, கள ஆய்வு மூலம் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக காவலர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகியுள்ளது" என கூறினார்.

இந்த சிறப்பு பயிற்சி முகாமில் 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள், பழங்குடியினர் நல வாரிய இயக்குநர் அண்ணாதுரை, ஐஜி பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் ஐடி பார்க்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.