ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கு - நிபந்தனை ஜாமினை தளர்த்த அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

author img

By

Published : Feb 25, 2022, 3:56 PM IST

கோடநாடு கொலை வழக்கு விசாரணை
கோடநாடு கொலை வழக்கு விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரின் நிபந்தனை ஜாமினை தளர்த்த அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தரப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கின் தொடக்கத்தில் முதல் குற்றவாளியாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஏற்கெனவே நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள நிலையில் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரும் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் தொடர்ந்து தங்களது விசாரணையை நடத்தி வரும் நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இன்றைய விசாரணையின்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இதுவரை 180 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும், எலக்ட்ரானிக் சாட்சிகளை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விசாரணையை முடிக்க காலதாமதம் ஆவதாகவும் விரைவில் கூடுதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

கோடநாடு கொலை வழக்கு விசாரணை

மேலும் தனபால், ரமேஷ் ஆகியோர் தங்களது நிபந்தனை ஜாமினை தளர்த்தக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கனகராஜ் பயன்படுத்திய 2 செல்போன்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிபந்தனையை தளர்த்தினால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி ஒருவருக்கு முன்பிணை, மற்றொருவருக்கு மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.