ETV Bharat / state

மாதுளம்பேட்டை கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:51 PM IST

Kumbakonam District Sessions Court:
மாதுளம் பேட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Kumbakonam District Sessions Court: கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பகோணம், மாதுளம் பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர்: கும்பகோணம் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த சங்கர் மற்றும் சங்கீதா தம்பதியினரின் மகன் சக்திவேல் (20). இவரைக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி, இரவு ஒரு கும்பல் கொலை செய்து உடலை, அதே மாதுளம்பேட்டை எல்லையாத் தெருவில் உள்ள சாக்கடை வாய்க்காலில் மறைத்து வைத்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடர்ந்தனர். இந்த விசாரணையில் சக்திவேல் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை முன்விரோதம் காரணமாக, நடைபெற்று இருப்பதும், அதனை ஆல்பாகுமார் என்பவரது மகனான தமிழ்செல்வன் (வயது 24) தலைமையில், அவனது கூட்டாளிகளான மணிமாறன் (எ) காளிதாஸ் (வயது 22), ராஜகுரு (வயது 25), கார்த்திக் (வயது 29), ராஜகோபால் (வயது 19), விஜய் (வயது 20) மற்றும் பரணிதரன் (வயது 24) ஆகிய ஏழு பேர் செய்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த ஏழு நபரையும் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இது குறித்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் (20) மற்றும் பரணிதரன் (24) ஆகிய இருவரும் வழக்கு நடைபெற்று வரும் காலத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்று நீதிபதி ராதிகா இன்று (டிச.8) மாலை குற்றம் சாட்டப்பட்ட தமிழ்செல்வன் (24), மணிமாறன் (எ) காளிதாஸ் (22), ராஜகுரு (25), கார்த்திக் (29), ராஜகோபால் (19) ஆகிய 5 பேருக்கும் ஐபிசி 147 மற்றும் 148 சட்டப்பிரிவின் கீழ் அனைவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.3 ஆயிரம் அபராதமும், ஐபிசி 302 சட்டப்பிரிவின் கீழ் அனைவருக்கும் ஆயுள் தண்டனையுடன் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கார்த்திக் (29) தற்போது மற்றொரு வழக்கில் சிறையில் இருப்பதால் அவர் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பீகார் ஆசிரியர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.