சுவாமிமலை கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம்

author img

By

Published : Dec 6, 2022, 11:43 AM IST

சுவாமிமலை கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இந்த கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்டது. மேலும் 60 தமிழ் வருட தேவதைகளை, 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகை தினமான இன்று (டிச.6) அதிகாலை சாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது சாமிக்கு தங்க கவசம் மற்றும் வைரவேல் ஆகியவை அணிவிக்கப்பட்டது. பிறகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, விசேஷ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார்.

சுவாமிமலை முருகன் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது

பின்னர் இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், சாமிநாத சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் மற்றும் தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறுகிறது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், பத்தாம் நாளான நாளை (டிச.7) காவிரியாற்றில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற்று, நாளை மறுதினம் (டிச.8) அன்று கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: கார்த்திகை பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.