ETV Bharat / state

"எங்கும் தமிழ் என்ற நிலையை எங்கும் மது என திமுக மாற்றிவிட்டது" - அன்புமணி ராமதாஸ் விளாசல்!

author img

By

Published : Jun 9, 2023, 12:59 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

தஞ்சாவூரில் நேற்று இரவு நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, டாஸ்மாக் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

கும்பகோணம் பாமக மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தேரடி வீதியில், நேற்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார் அப்போது, “டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதில் எனக்கு மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் உண்டு காரணம் நமக்குச் சோறு போடும் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி.

நான் அவர்களைக் கடவுளாகப் பார்க்கிறேன். விவசாயிகளையும், விவசாய நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இதற்காகத் தான் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முதலில் பாமக குரல் கொடுத்தது. கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வராகச் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள டி.கே சிவக்குமார், அடுத்த 5 ஆண்டுகளில் நீர் பாசனத்துறை திட்டங்களுக்காக 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வோம் எனக் கூறுகிறார்.

மது விற்பனையை மிஞ்சிய துறை எதுவுமில்லை: ஆனால் இங்குத் தமிழ்நாட்டில், மது விற்பனை தற்போது ஆண்டிற்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி என்பதனை இன்னும் 3 ஆண்டுகளில் ஆண்டிற்கு ரூபாய் 80 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயித்துச் செயல்படுகிறார்கள். கடந்த 2003 - 2004 இல் ஆண்டிற்கு ஆண்டிற்கு ரூபாய் 3,600 கோடியாக இருந்த மது விற்பனை இன்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஆயிரம் கோடியாக 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இத்தகைய வளர்ச்சி வேறு எந்த துறையிலும் இல்லை குறிப்பாக, தொழில்துறை, வேளாண்துறை, நீர்ப்பாசனத்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை வேறு எந்த துறையில் இத்தகைய வளர்ச்சி இல்லையே, மது விற்பனை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உடல் நலம், மனநலம், இளம் விதவைகள், விபத்துக்கள், கொலை, கொள்ளை, குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்க வழி வகுக்கிறது” என்றுக் கூறினார்.

தடுப்பணைகள் அமைக்கக் கோரினால் மணல் குவாரியை அமைக்கிறது: மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் கிடப்பில் உள்ள பல நீர்ப்பாசன திட்டங்களைச் செயல்படுத்திட ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி வீதம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தினால் தமிழகத்தில் 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கிட முடியும், நீர் பாசனத்துறைக்குத் தெலுங்கானா நிதிநிலை அறிக்கையில் 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடுகள் செய்கிறார்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள்.

கேரளாவில் 3500 மி.மீ மழை பெய்வதால் அங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் நீர்பாசனத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. 110 நீளமுள்ள கொள்ளிடம் ஆற்றில் 11 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தால் அவர்கள், 9 ஆறுகளில் 25 இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கிறார்கள்” என்று கூறினார்.

சிலரின் கையெழுத்துக்கள் மூலம் பலரின் தலையெழுத்துக்களை மாற்றுவோம்: “பாமகவிற்கு மட்டும் ஒரு வாய்ப்பு தந்தால், 5 ஆண்டுகள் போதும் நாங்கள் செய்ய நினைப்பது அனைத்தையும் 5 ஆண்டுகளில் பூர்த்தி செய்து விடுவோம் அதற்கு மேல் எங்களுக்கு வேண்டாம். சில கையெழுத்துக்கள் மூலம் பலரின் தலையெழுத்துக்களை மாற்றுவோம். தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மட்டும் மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறும் கட்சிக்கு தான் வாக்களிப்போம் என்ற முடிவை எடுத்து விட்டால், கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்.

பாமக ஆட்சியில் கல்வி, மருத்துவம் விவசாயிகளுக்கான இடுப்பொருட்கள் முற்றிலும் இலவசமாக இருக்கும். எங்களது முதலீடுகள் வேளாண்துறைக்கும், நீர்பாசனத்துறைக்கும் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், முதல் கையெழுத்து அதற்காக இருக்கும் என்றெல்லாம் பேசினார். தற்போது அவர் மதுவிலக்கு குறித்த அவர்களின் முடிவை தமிழக மக்களுக்கு, மதுவிலக்கு கொண்டு வர மாட்டார்களா ? படிப்படியாக கொண்டு வருவார்களா என்பதனை தெளிவுபடுத்திட வேண்டும்” என்றுக் கூறினார்.

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ”சோறு போடும் விவசாயிகளை நான் கடவுளாக பார்க்கிறேன், அவர்களுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு, தற்போது ரூபாய் 2 ஆயிரத்து 183 தான் வழங்குகிறார்கள். இதனை குறைந்தபட்சம் ரூபாய் 3 ஆயிரமாக நிர்ணயித்து அறிவித்திட வேண்டும். அரசிற்கு வேண்டுகோள் விடுத்த அதே வேளையில், திமுக தனது தேர்தல் அறிக்கை, மாதம் தோறும் மின் அளவு கணக்கீடு பற்றி 2 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை வாய் திறக்கவில்லை.

மின் கட்டணம் உயர்த்தி 10 மாதங்கள் ஆகாத நிலையில் மீண்டும் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் வருகிறது. இதனை இன்று தமிழக அரசு, வீட்டு உபயோக மின் இணைப்பிற்கு கட்டண உயர்வு இல்லை என்றும், ஆனால் வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்களுக்கு 15 முதல் 22 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என அறிவித்து உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே அதிக தொழில் கூடங்கள் கொரானாவிற்கு பிறகு மூடப்பட்டு விட்டது. எனவே மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் இதற்காக பாமக போராட்டத்தை முன்னெடுக்கும்” என்றார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதற்கு காரணம்: ”இன்றும் தமிழகத்தில் 3,600 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதே காரணம். அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு விட்டதா? தனியார் கல்விக்கு இணையாக கல்வி கிடைக்கிறதா? என்றால் இல்லை என்ற போதும், படிக்கின்ற மாணவர்களின் பெற்றோரின் வருமானம் குறைந்து விட்டது. வேலை வாய்ப்பு பலருக்கு பறிபோய் விட்டது. எனவே தனியார் பள்ளிகளில் சேர்க்க பணம் கட்ட முடியாத நிலையில் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்” என்றார்.

எங்கும் மது, எதிலும் மது: அவர் தொடர்ந்து பேசுகையில், திமுக அரசின் வீழ்ச்சி என்பது அமைச்சர் செந்தில் பாலாஜியின் மதுவிலக்கு துறையில் இருந்தே தொடங்கும் என்றார், இப்போது தமிழ்நாடு என்பது குடிகார நாடாக இருக்கிறது என்றும், நாம் கேட்டது எங்கும் தமிழ், எதிலும் தமிழ். ஆனால் அரசு கொடுப்பதோ, எங்கும் மது, எதிலும் மது என்றாகி விட்டது. கடந்த 55 ஆண்டுகளில், இரு கட்சிகளும் மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றி விட்டார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார் எண்ணிக்கை மட்டும் 72 லட்சம், பதிவு செய்து புதுப்பிக்க தவறியவர்கள் எண்ணிக்கை 60 லட்சம் என மொத்தம் வேலை வாய்பற்றோர் மட்டும் 132 லட்சம் பேர், இதில் 90 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, மாவட்ட தலைவர் அமிர்தகண்ணன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.