ETV Bharat / state

கும்பகோணம் அருகே மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 1:39 PM IST

Package House Collapse at Kathiramangalam Village Old Woman Died
மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

Kumbakonam Rain: கும்பகோணம் அருகே மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், இடியும் நிலையில் உள்ள வீடுகளை ஆய்வு செய்து புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் வடக்கு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் 20க்கு மேல் உள்ளது.

இந்த தொகுப்பு வீட்டில் கருப்பாயி என்ற 60 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், இவரது நான்கு பெண் குழந்தைகளும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், கருப்பாயி அந்த தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

திருவிடைமருதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாகவே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், கருப்பாயி 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கதவைத் திறந்த உடன் அந்த வீட்டின் கூரை இடிந்து அவர் மேல் விழுந்து உள்ளது. உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கி இருந்த மூதாட்டி கருப்பாயியை மீட்டு, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, கருப்பாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் உடற்கூராய்விற்கு பின்னர், கருப்பாயின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவிடைமருதூர் வட்டாரங்களில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளில், இடியும் நிலையில் உள்ள வீடுகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் அந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு, புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், இதேபோல் கடந்த வாரம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஒரு பெண் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “பாஜகவுக்கு பணியாற்றிய கருப்பு ஆடுதான் அண்ணாமலை” - காட்டமாக விமர்சித்த ஜோதிமணி எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.