ETV Bharat / state

"தரமான கல்வியை தராமல் போனதே திராவிட மாடல்" - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Sep 8, 2022, 10:06 AM IST

தரமான கல்வியை தராமல் போனது தான் திராவிட மாடல்… அன்புமணி ராமதாஸ்
தரமான கல்வியை தராமல் போனது தான் திராவிட மாடல்… அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களோடு போட்டி போடும் அளவுக்கு தரமான கல்வியை தராமல் போனது தான் திராவிட மாடல் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் பாமக சார்பில் "பாமக 2.0" செயல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று (செப். 7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "மதுபானம், போதைப்பொருள், சூதாட்டம் மூன்றும் தமிழ்நாட்டை பாதிக்கின்றன. தமிழ்நாட்டின் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயில், 50 விழுக்காடு மது விற்பனையில் கிடைக்கிறது. இது வெட்க கேடானது.

வருவாயை அதிகரிக்க மாற்றுவழிகள் பல உள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து குழு அமைத்து விசாரித்து அறிக்கை அளித்து 3 மாதம் கடந்த பிறகும் தடை செய்யப்படவில்லை. அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மாத்திரை வடிவிலான போதைப்பொருள்கள் புழக்கத்தில் வந்தள்ளது. தமிழ்நாட்டில் தற்போது காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதுகுறித்து ஐநா சபை பல்வேறு எச்சரிக்கைகளை தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே நாம் தரமான சேமிப்புக் கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் 40 கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது. .

பாமகவிற்கு மட்டும் 5 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு 50 ஆண்டு காலத்திற்கு தேவையான தொலைநோக்கு திட்டங்கள் அனைத்தையும் செயல் படுத்துவோம். அதற்கான செயல் திட்டங்கள் எங்களிடம் உள்ளது. காவிரி ஆற்றில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் மட்டும் 300 டிஎம்சியாக இருக்கும் என்றும், கொள்ளிடத்தில் 10 இடங்களில் தடுப்பணைகளை கட்டினால் 70 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

தரமான கல்வியை தராமல் போனதே திராவிட மாடல்

தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளிடம் எந்த நீர்ப்பாசன திட்டமும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மட்டும் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் பாமக தான் நல்ல ஒரு எதிர்கட்சியாக இருந்து அரசு நல்லது செய்யும் போது பாராட்டியும், தவறுகள் செய்யும் போது போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.

தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக தர வேண்டும், அது அரசின் கடமை அதனை பெறுவது மக்களின் உரிமை. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், மத்திய அரசு, 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, மீத்தேன், ஷேல் வாயு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மௌனம் காக்கிறது. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 60 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு மாணவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையை தருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளில் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களோடு போட்டி போடும் அளவுக்கு தரமான கல்வியை தராமல் போனது தான் திராவிட மாடல். இங்கு தரமான கல்வி இல்லை.

நம்முடைய கல்வி திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. டெல்டா பகுதியில் கொலை, கொள்ளை தினமும் அரங்கேறுகிறது. இதனை அரசு தடுத்து மக்கள் அமைதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்ணா பிறந்தநாளான செப் 15ஆம் தேதிக்கு முன்பாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இல்லை எனில், எனது தலைமையிலேயே விரைவில் இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்படும். புதிய விமான நிலையம் தஞ்சையில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு அதனை கும்பகோணத்தில் அமைக்க வேண்டும். பாமக சாதி கட்சி என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது, இது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, சமூக நீதிக்கான கட்சியாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் பாஜக சாலைமறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.