ETV Bharat / state

யார் பிரதமர் என்பதை அண்ணா அறிவாலயம் முடிவெடுக்கும்: திருச்சி சிவா சூளுரை!

author img

By

Published : Jun 14, 2023, 7:11 PM IST

தஞ்சையில் முப்பெரும் விழா திமுக எம்.பி திருச்சி சிவா  மனித வளர்ச்சி குறித்து சிறப்புரை
தஞ்சையில் முப்பெரும் விழா திமுக எம்.பி திருச்சி சிவா மனித வளர்ச்சி குறித்து சிறப்புரை

2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதை அண்ணா அறிவாலயம் தான் முடிவு செய்யும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா மேடைப்பேச்சு

தஞ்சாவூர்: பெரியார் படிப்பகம், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, முன்னாள் முதலமைச்சர் நூற்றாண்டு விழா முப்பெரும் விழா, தஞ்சாவூர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நம்மை விடப் பெரிய மாநிலங்கள் எல்லாம் இன்னமும் பின்தங்கித் தான் இருக்கிறார்கள். மக்கள் தொகை மட்டுமல்ல, அவர்களுக்கு பல்வேறு வகையான வசதி வாய்ப்புகளும் உண்டு. இயற்கை வளம் மற்றும் மண்வளம் உண்டு. தொழில் வளம் உருவாக்கிக் கொள்வார்கள். எல்லாவற்றையும் அங்கேயே போய்க் கொண்டு கொட்டுவார்கள். ஆனால் தமிழ்நாடு கண்டிருக்கிற மனித வளர்ச்சி என்கிற மனித மேம்பாட்டு வளர்ச்சி என்பது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. எல்லோருக்கும் எல்லாம், எல்லோருக்கும் என்று சொல்லும்போது பிரிவினை இல்லை, ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் கிடையாது.

எல்லோரையும் முதலில் ஒன்றாக மாற்றுவோம். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று நடைமுறைப்படுத்துகிற ஒரே கட்சி, இந்தியாவில் திமுக தான். நமக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கின்றன. கொள்கையும் லட்சியமும் வைத்திருக்கிற அமைப்புகளுக்கு எல்லா காலத்திலும், போராட்டக் காலம் தான் என்பதில் மாறுபாடே கிடையாது. ஆளுங்கட்சி என்றால் சொகுசாக இருப்போம் என்பது அல்ல. ஆளும் கட்சியாக இருக்கிறபோது நமக்குச் சவால்கள் உண்டு. இவர்கள் நல்லது செய்கிறார்களே என்று எரிச்சல் அடைகிறவர்களும் உண்டு.

நான் நல்லவன் எல்லா கடமைகளையும் தானே ஆற்றுகிறேன். என்னை ஏன் எதிர்க்கின்றீர்கள் எனக் கேட்கக் கூடாது. இது பிடிக்காமல் இருக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இன்றைக்குத் திமுக ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கூடப் பொறுக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் அடிப்படை நியதி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பது. ஆனால் பிரிட்டன், கியூபா ஆகிய இரண்டு நாடுகளிலும் மருத்துவம் என்பது பொதுத் துறையில் உள்ளது. கல்வியும்,மருத்துவமும் இலவசம், பிரிட்டனில் மட்டும் தான் ஆயிரம் பேருக்கு மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் 4000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிற போது நாம் பிரட்டனையும் கடந்து நிற்கிறோம் என்று பேசினார். மேலும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் கடந்து நிற்கிறோம். இன்றைக்கு நீட், நெக்ஸ்ட் என பல நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாம் எதிர்த்து குரல் கொடுக்கிறோம் மற்ற மாநிலங்கள் அமைதியாக இருக்கின்றன. திமுகவில் பல நேரங்களில் முடிவுகளை நாங்களே எடுக்கின்றோம்.

அது சரியான முடிவாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கள் தலைமைக்கு உண்டு, காரணம் கொள்கை வழியிலே வளர்ந்த காரணத்தினால். எல்லா நேரங்களிலும் அதில் உணர்வுப்பூர்வமாக நின்று இருக்கிறோம். ஒன்றியத்தில் நடைபெறுகின்ற ஆட்சி கூட்டாட்சி. மாநில நலன்களுக்கு எதிராக, மாநில மொழிகளுக்கு எதிராக, அடிப்படை மக்களுக்கு எதிராக, பல சட்டங்களை இயற்றுகிற போது, சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காகச் சட்டங்கள் இயற்றுகிற போது, திமுக இருக்கிற காரணத்தினால் தான் இந்தியாவில் பல மாநிலங்கள் இன்னும் அடிமைப்படாமல் இருக்கின்றன.

திமுக பெயரளவிற்குத் தான் மாநிலக் கட்சி, ஆனால் இதனுடைய வீரியமும், தாக்கமும் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். நாளை நடைபெறுகின்ற ஆட்சிக்கு மாற்றாக எந்த ஆட்சி வரவேண்டும், யார் பிரதமராக வரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் தான். இந்த கூற்றினை வடபுலத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள், ஸ்டாலின் தான் தேர்ந்தெடுப்பார் என்று. இந்த அளவிற்கு இந்த இயக்கமும், தலைவரும் இந்தியா மூலம் முக்கியமாக ஒரு அங்கமாக மாறி இருக்கிறோம்.

எதிர்ப்புகள் பல வருகின்றன ஆனால் நாம் அதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. பல வகைகளில் முனையலாம், நாம் முடங்கப் போவதில்லை. காரணம் பெரியார் அண்ணா கலைஞர் என்ற மாபெரும் தலைவர்கள் கண்ட இயக்கம் இது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பெரியார் படிப்பகச் செயலாளர் வெற்றி குமார் உள்ளிட்ட திமுக ஆதரவாளர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "அறியாமையில் பேசும் அண்ணாமலை" - டிடிவி தினகரன் கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.