ETV Bharat / state

சராசரியாக 50 முதல் 60 யூனிட் வரை ரத்தம் தேவை - தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்

author img

By

Published : Jul 2, 2023, 9:36 AM IST

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில், சராசரியாக 50 முதல் 60 யூனிட் வரை ரத்தம் மருத்துவமனைக்கு தேவைப்படுவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையான மருத்துவமனையாகும். இங்கு தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இங்கு வந்து பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டு, மொத்தம் 100 யூனிட் ரத்த தானம் வழங்கினர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, “உயிர் காக்கும் முக்கிய காரணிகளில் ரத்தம் மிகவும் அவசியம். ஒருவர் ரத்ததானம் செய்வதால் மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சராசரி தேவையாக 50 முதல் 60 யூனிட் வரை ரத்தம் தேவைப்படுகிறது.

மேலும் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தினசரி 30 முதல் 40 வரை மகப்பேறு பிரசவம் மற்றும் 25 மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், ரத்தப்போக்கு அதிகமாக உள்ள கர்ப்பிணி தாய்மார்களை காப்பாற்ற தினசரி 40 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.

அதுபோக சிறப்பு பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. ஆகவே, ரத்தம் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் அனைவரும் ரத்த தானம் செய்வதன் மூலம்தான் அதனை சேகரிக்க முடியும். மேலும், ரத்தம் விற்கும் பொருள் அல்ல” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவர் செல்வம் மற்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லியோ ஜோசப், செயலாளர் டாக்டர் கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இணைந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கும் மையத்தினையும் ஏற்படுத்தி உள்ளனர். அதன் மூலம் அறிய வகை ரத்தம் தேவைப்படும்போது, இந்த மையத்தின் மூலம் ரத்தம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இதையும் படிங்க: கும்பேஸ்வரன் கோயிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.