ETV Bharat / state

தென்காசி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 9:28 PM IST

சிவகிரி சோதனை சாவடியில் பிடிபட்ட கஞ்சா வழக்கு.. மேலும் இருவர் கைது
சிவகிரி சோதனை சாவடியில் பிடிபட்ட கஞ்சா வழக்கு.. மேலும் இருவர் கைது

Tenkasi Sivagiri check post: சிவகிரி சோதனை சாவடியில் கேரளாவிற்கு மினி லாரியில் கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி: கொல்லம் - தென்காசி சாலையில் சிவகிரி சோதனை சாவடி உள்ளது. அதில், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.8ஆம் தேதி தென்காசி மாவட்டம் சிவகிரி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சிவகிரி போலீசார் சோதனைச் சாவடி வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு சென்ற மினி லாரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில், காய்கறி மூட்டைகளுக்கு இடையே பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் லாரியில் வந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பறம்பு பகுதியைச் சேர்ந்த பஷீர் மகன் ஷியாஸ் (27) மற்றும் புளியங்குடி கற்பக வீதியைச் சேர்ந்த அய்யனு மகன் முருகானந்தம் (29) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கஞ்சாவை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றதாலும், தென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு 105 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியதாலும், மாவட்ட எஸ்.பி.சாம்சன் சிவகிரி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

105 கிலோ கஞ்சா பறிமுதல் என்பதால் இதில் வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டு உள்ளனர் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கேரளா மாநிலம் பறக்கோடு அருகே பத்தினந்திட்டா பகுதியை சேர்ந்த அஜ்மல் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அக்பர்அலி (30) உள்ளிட்ட இருவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகிரி சோதனை சாவடியில் கடந்த 8-ஆம் தேதி மினி லாரியில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொகுசு காரில் 4,000 மதுபாட்டில்கள் கடத்தல்.. 30 கி.மீ சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.