ETV Bharat / state

சிவகிரி அருகே காட்டுப்பன்றி வேட்டை; ஏழு பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 10:57 PM IST

காட்டுப் பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக ஏழு நபர்களுக்கு அபராதம்
காட்டுப் பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக ஏழு நபர்களுக்கு அபராதம்

Tenkasi crime news: சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக ஏழு நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி: சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கருப்பசாமி கோயில் பீட் அரிவாள் தீட்டி சரகத்தில், தெற்கு பிரிவு பகுதியில் அரசு பாதுகாப்பு காடு உள்ளது. இந்த காட்டில் அத்துமீறி சிலர் நுழைந்து, காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரின் உத்தரவின் அடிப்படையில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் அசோக்குமார், வன காப்பாளர் தருணியா ஆகியோர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கீழ்க்கண்ட நபர்களை தடுத்து நிறுத்திய வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், கடையநல்லூர் தாலுகா இடைகால் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (21), ராஜன் (27), மாரிமுத்து (50), முத்துக்குமார் (34), சுரேஷ் (34), விஜய் (23) மற்றும் அம்பாசமுத்திரம் தாலுகா மேல சேவல் கிராமத்தைச் சேர்ந்த பால்குமார் (21) ஆகிய ஏழு நபர்களும், வேட்டை நாய் உதவியுடன் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றியின் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், ஏழு நபர்களுக்கும் சேர்த்து 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வனப்பகுதி, தற்போது மர்ம நபர்களின் கூடாரமாக மாறி வருகிறது. பயிற்சி பெற்ற வேட்டை நாய்கள் மூலம் மான், காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுவதால், தாவர உண்ணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகின்றது.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில் “அடுத்த தலைமுறைக்கு தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர் கிடைக்க வளமான காடுகள் வேண்டும். வனப்பகுதியில் பெருக்க சமநிலை சீராக இருந்தால் மட்டுமே, வளமான காடுகள் சாத்தியமாகும். சங்கிலி தொடர்பான பசுமையான காடு, அது சார்ந்த தாவர உண்ணிகள், இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாமிச வகைகள் அனைத்தும் சீராக வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, காடு வளமாக இருக்கும்.

மேலும், சிவகிரி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இரவு நேரத்தில் வனத்துறையினரும், போலீசாரும் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மணலை கயிறாக திரிக்கவும் முடியாது; பெரியார் சிலையை அகற்றவும் முடியாது" - திருச்சியில் திருமாவளவன் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.