ETV Bharat / state

Captain Miller: தென்காசியில் தனுஷின் படப்பிடிப்பு நிறுத்தம்; கலெக்டர் அதிரடி

author img

By

Published : Apr 25, 2023, 6:11 PM IST

Captain Miller: தென்காசியில் தனுஷின் படப்பிடிப்பு நிறுத்தம்
Captain Miller: தென்காசியில் தனுஷின் படப்பிடிப்பு நிறுத்தம்

முறையான அனுமதி இன்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக, தென்காசி மாவட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முறையான அனுமதி இன்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக, தென்காசி மாவட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

தென்காசி: கடையம் அருகே உள்ள தோரணமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பினால் பல இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமு உதயசூரியன் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், “தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தில் அமைந்துள்ளது, பழைய குற்றாலம். இங்கு மலையில் இருந்து விழும் அருவி நீரில் மக்கள் தினமும் நீராடி வருகின்றனர். இந்த அருவியில் விழும் தண்ணீர் மூலம் விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதில் செங்குளம் கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு, எங்கள் பகுதியில் உள்ள சுமார் 15 குளங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் மத்தளம்பாறை கிராமத்தில் உப்பினாங்குளம் அருகில் உள்ள பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்காக, இவர்கள் மிக பிரமாண்டமான கோயில் அமைப்பு கொண்ட செட் ஒன்றை உருவாக்கியும், அதன் முன்பு ஓலை குடிசைகளினால் சிறிய கிராமம் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி உள்ளனர். தீயிடும் காட்சிகள் எல்லாம் இதில் இடம் பெறுகிறது. இவர்கள் பயன்படுத்தும் இந்த பகுதி, வனத்துறையின் காப்பு காட்டுப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் வரை உள்ள வெளிமண்டல பாதுகாப்பு பகுதி ஆகும்.

இங்கு படப்பிடிப்பு நடத்த வனத்துறையிடம் பெற வேண்டிய தடையில்லா சான்று பெறாமல், படப்பிடிப்பை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பிற்காக, இவர்கள் அதிக கதிர் வீச்சு கொண்ட ஒளியை உருவாக்கும் ஹைமாஸ் மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மிளா, மான், யானை, புலி மற்றும் காட்டு முயல் போன்ற விலங்குகள் கலைந்தோடி, தனியார் நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியும், உயிருக்கு அச்சம் விளைவித்தும் வருகின்றன.

மேலும், முக்கியமாக இது யானைகளின் வழித்தடம் என்பதால், கீழே குடிநீருக்காகவும், பசுமை உணவுகளுக்காகவும் இறங்கி வரும் யானைகள், மீண்டும் மலைக்குச் செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்படி ஒரு யானை கடந்த 15 நாட்களாக திரவிய நகர், கடவாக்காடு, தோரணமலை மற்றும் மத்தாளம்பாறை ஆகியப் பகுதிகளில் சுற்றித் திரிந்து தென்னை, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

எனவே, அவர்கள் வன உயிரினங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறான இடத்தில் வனத்துறையின் வெளிமண்டலப் பாதுகாப்பு பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை நிறுத்திடவும், யானைகள் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரங்க அமைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், படப்பிடிப்பை நிறுத்துமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் மிஷ்கினின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.