நாமக்கல்லைத் தொடர்ந்து சேலத்திலும் உணவு தர சோதனை: சிக்கும் பிரபல உணவகங்கள்!

நாமக்கல்லைத் தொடர்ந்து சேலத்திலும் உணவு தர சோதனை: சிக்கும் பிரபல உணவகங்கள்!
Food safety Inspection in Salem: நாமக்கல்லைத் தொடர்ந்து சேலத்திலுள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம்: நாமக்கல் பகுதியில் தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 42க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி ஒருவர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா உணவு விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனையில் கிலோ கணக்கில் அசைவ உணவுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, சேலத்திலுள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலத்திலுள்ள பிரபல அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், சுமார் 165 கிலோ எடையுள்ள சுகாதாரமற்ற ஷவர்மா மற்றும் கோழி, ஆட்டிறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகரச்சிக்கு உட்பட்ட சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம் அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையிலான குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா மற்றும் கோழி, ஆட்டிறைச்சி என சுமார் 200 கிலோ எடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர் .
தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை தொடரப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன், "தரமற்ற அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். முறையற்ற நிலையில் இது போன்ற உணவுகளை உட்கொள்ளும்போதுதான் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பொதுவாகவே எல்லா இறைச்சிகளிலும் கிருமிகள் இருக்கும். அதை நன்றாக வேக வைத்தால் மட்டுமே அந்த கிருமிகள் அழியும். அதனால் பாதிப்பு ஏற்படாது.
ஷவர்மா என்பது முழுமையாக சூடுபடுத்தி வேக வைக்கப்படாத நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால் அதை உட்கொள்பவர்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படும். அதை உடனடியாக கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் தாமதப்படுத்துவதனால் உயிரிழப்புகள் உண்டாகிறது.
இன்று காலை தொடங்கப்பட்ட சோதனையில் இதுவரை 10 உணவு கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். மேலும், இந்த சோதனை தொடரும். ஷவர்மா, மாலை நேரத்து உணவு என்பதால் மாலையில் சேலம் பகுதிகளில் எங்கெங்கு ஷவர்மா விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சோதனை நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.
