ETV Bharat / state

பாமக எம்.எல்.ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு.. குடும்பத்தோடு தலைமறைவானதாக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 2:25 PM IST

PMK MLA absconding with family Police searching in dowry abuse case
சதாசிவம்

Mettur MLA Sadhasivam Absconding: மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சணை கொடுமை உள்பட 6 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் குடும்பத்தோடு தலைமறைவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்: மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் சங்கர், மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாமக எம்எல்ஏ தனது குடும்பத்துடன் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏ சதாசிவத்தின் மகன் சங்கருக்கும், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோவியா என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் ரூ.5 கோடி ரூபாய் பணம், ரூ.25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 200 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியதாக கூறப்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கர், பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தவுடன், சங்கர், “நான் இப்படித்தான் நீ வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு சென்று விடு” என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இச்சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் மன வேதனையுடன் சங்கருடன், மனோவியா ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் சங்கரின் நடவடிக்கை, பெண்களை வீட்டுக்கு அழைத்து வரும் வரை வளர்ந்து சென்றது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சங்கரின் மனைவி இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரும், மாமனாருமான சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதனை ஏதும் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா வீட்டிலிருந்து புறப்பட்டு சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பிச் சென்றார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் தந்தையிடம் கூறிய மனோவியா சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகாரை கொடுத்துள்ளார். இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் வராமல் சங்கர் போக்கு காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர், மனைவி மனோவியாவை மிரட்டும் நோக்கத்தில் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, “நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது, அதனை வெளியிடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அவரது மனைவி பேபி மகள் கலைவாணி, மகனும் கணவருமான சங்கர் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அவரது மனைவி பேபி, மகள் கலைவாணி, சங்கர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தன் குடும்பத்துடன் தற்போது தலைமறைவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கை எப்படியாவது மேல் நடவடிக்கைக்கு செல்ல விடாமல் போலீசாருக்கு, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டுமல்லாமல் தலைமறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் தன் குடும்பத்தார் அனைவருக்கும் முன் ஜாமீன் வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்த போதும் போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கர், மகள் கலைவாணி, மனைவி பேபி ஆகிய நான்கு பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்... 12 பேர் மீது வழக்குப்பதிவு.. மீண்டும் மாணவர்கள் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.