சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் அருகே முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையின் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இன்று (நவ. 22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினர். மேலும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 65 நோயாளிகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல - நீதிபதி வேதனை!
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு செய்த 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தீ விபத்துக்கான காரணம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்று வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்து, மீண்டும் மருத்துவ சேவையை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?