ETV Bharat / state

காணொலி வாயிலாக குறை தீர்க்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ராமன் விளக்கம்!

author img

By

Published : Oct 24, 2020, 12:06 AM IST

மாவட்ட ஆட்சியர் ராமன் விளக்கம்
மாவட்ட ஆட்சியர் ராமன் விளக்கம்

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலிருந்து காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

கூகுள் மீட் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் , வேளாண் பெருமக்களுக்கான திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாகவும் நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவும், விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களை கூகுள் மீட் காணொலியின் வாயிலாக சந்தித்து தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு, தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

விவசாய பெருமக்களும் இந்நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டமாக கூடுவதை முற்றிலும் தவிர்த்து, இந்நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் பெருமக்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது.

விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களின் உற்பத்தியை உயர்த்திட பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவல் ஆக்கல் தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக ஒருங்கிணைந்த வேளாண்மை, பயனற்ற நில மேலாண்மைத் திட்டம், நீடித்த வறட்சி நில மேலாண்மை, கூட்டுப் பண்ணையம், விரிவான நீர் வடிநில பகுதி, வளர்ச்சி செயல்பாடுகள் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம், வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதோடு, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயித்து விற்பனை செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2020) தென்மேற்குப் பருவ காலத்தில் சராசரியாக 440.60 மி.மீ மழை ஆகும். இந்த தென்மேற்குப்பருவமழை காலத்தில் 597.40 மி.மீ மழை கிடைத்துள்ளது. சராசரியை விட இந்தாண்டு 156.80 மி.மீ மழை அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேலம் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 370.50 மி.மீ ஆகும். இக்காலத்திலும் அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு மழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் அம்மழைநீர் வீணாகமால் தடுப்பதற்கு ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் தூர்வாரி கரைகள் செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. வரத்து வாய்க்கால்கள் சீர்செய்யப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தி வரத்து வாய்க்கால்கள் சீர் செய்வதற்கும், பாசன வாய்க்கால்களை பராமரிப்பதற்கும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27.85 கோடி மதிப்பீட்டில் 127 குடிமராமத்து பணிகள் எடுக்கப்பட்டு 99 குடிமராமத்துப்பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 28 குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாவட்டத்தில் செப்டம்பர் 2020 மாதம் வரை 1,44,925 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 151.300 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 21.688 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 130.678 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 231.010 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரங்களான யூரியா 16,734 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 6,710 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 8,011 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 16,294 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்களுக்கு 1,56,549 எக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 47,932.81 எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயிர் உற்பத்தியில் 14.628 லட்சம் மெ. டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 7.237 இலட்சம் மெ. டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு 31.10.2020 தேதிக்குள்ளும், நெல் (சம்பா) பயிருக்கு 30.11.2020 தேதிக்குள்ளும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்" என இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கா.கணேசன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அ.நாசர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வி.சத்யா என இதில் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திமுக எம்பி ட்விட்டர் பதிவுக்கு நடிகர் பார்த்திபன் பதிலடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.