ETV Bharat / state

போதையில் தகராறு செய்த கணவர்.. ரீப்பர் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி!

author img

By

Published : Jul 4, 2023, 8:01 PM IST

Etv Bharat
Etv Bharat

ராணிப்பேட்டையில் மது அருந்திவிட்டு தகராறு செய்த குடிகார கணவரை ரீப்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கணவரை கொலை செய்த மனைவி கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள சின்ன தகர குப்பத்தைச் சேர்ந்தவர், லாரி மெக்கானிக் தேவராஜ் (40). இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே தினமும் குடித்துவிட்டு வந்து தேவராஜ், தனது மனைவி பானுமதியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை திருத்தும் நோக்கத்தில் மது குடிக்க வேண்டாம் என்று அன்பாகவும், கோபமாகவும் மனைவி பானுமதி அடிக்கடி தெரிவித்து வந்தார்.

ஆனால், எதையும் தேவராஜ் கேட்காமல் வழக்கம்போல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதேபோல் நேற்று (ஜூலை 03) இரவு 10 மணிக்கு குடித்துவிட்டு வந்த தேவராஜ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை தூக்கி மனைவி மீது போட முயன்றார்.

அப்போது, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டிலிருந்த ரீப்பர் கட்டையால் கணவனை பானுமதி அடித்தே கொலை செய்தார். சில மணி நேரங்கள் கணவனின் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த மனைவி, அதன் பின்னர் வாலாஜா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தேவராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பானுமதியை கைது செய்தனர். குடிகார கணவர் தன் மீது ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரீப்பர் கட்டையால் கணவரை அடித்ததாக பானுமதி விசாரணையில் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், காவல் துறையினர் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Online Rummy - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ராணுவ வீரர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.