ETV Bharat / state

Online Rummy - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ராணுவ வீரர் தற்கொலை!

author img

By

Published : Jul 4, 2023, 4:14 PM IST

தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த ராணுவ வீரர், தனது தாயிடம் செல்போனில் பேசியபடியே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ராணுவ வீரர் தற்கொலை

தூத்துக்குடி எட்டையாபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர், வேலுப்பிள்ளை. இவரது மகன் மணித்துரை (28). இவர், 2015ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில் மணித்துரை கடந்த 1ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் இருந்த போது திடீரென துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மணித்துரைக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான், உதய சுருதி என்பருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மணித்துரை பணியில் இருக்கும்போது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணுவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இது குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவு பணத்தை இழந்த காரணத்தினால் மனம் உடைந்து மணித்துரை தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

மணித்துரை தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, கீழக்கரந்தையில் இருக்கக்கூடிய தனது தாய் கனகவேலம்மாளுக்கு செல்போனில் அழைத்துப் பேசி உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணம் இழந்தது குறித்தும், ஆன்லைனில் விளையாட பலரிடம் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை என்றும்; இனி தான் வாழ விரும்பவில்லை என பேசிக்கொண்டு இருக்கும்போதே துப்பாக்கி சத்தம் இரண்டு முறை கேட்டதற்குப் பிறகு, மணித்துரை பேசவில்லை என்றதும் அவர் தாய் அதிர்ச்சியில் உறைந்து கத்தி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் மணித்துரை உடல் இன்று (ஜூலை 07) அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. ராணுவ வீரர் மணித்துரை விடுமுறைக்காக கடந்த 1ஆம் தேதி ஊருக்கு வர இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டு, உடல் மட்டுமே ஊருக்கு வந்து சேர்ந்துள்ளதாக உறவினர்கள் வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்தனர். மேலும், மணித்துரையின் தந்தை வேலுப்பிள்ளை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மணித்துரையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள், ஆன்லைன் ட்ரேடிங், ஆன்லைன் கடன் செயலிகள் உள்ளிட்டவைகள் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணத்தினை இழந்துவிட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்குக் கூடிய விரைவில் இறுதி முடிவுகட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: சினிமா பைனான்சியர் கொலை வழக்கு; முக்கியக் குற்றவாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.