ETV Bharat / state

சாதிய ரீதியில் நடைபெற்ற இரட்டைக்கொலையை வன்மையாக கண்டிக்கிறோம்- கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 11, 2021, 10:50 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் பேட்டி

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே இரட்டைக்கொலையில் உயிரிழந்தோர் குடும்பத்தை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலாகிருஷ்ணன், “சாதிய ரீதியில் நடைபெற்ற இரட்டைக்கொலையை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த 7ஆம் தேதி இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சோகனூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன், செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலாகிருஷ்ணன், “திட்டமிட்டு சாதிய ரீதியில் நடைபெற்ற இரட்டைக்கொலையை வன்மையாக கண்டிக்கிறோம். சாதிய வன்மம் கொண்டவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வன்மத்தை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும். குற்றவாளிகளை யாரும், எந்த விதத்திலும் பாதுகாக்க கூடாது. இது போன்ற வழக்குகள் முறையாக நடத்தப்படாததால், கடைசியில் குற்றவாளிகள் தப்பிவிடுகிற செய்தியே வெளிவருகிறது.

காவல்துறை பொறுப்புணர்வோடு, கடமை உணர்வோடு சாதிய வன்முறை வழக்குகளை நடத்துவது இல்லை. மூன்று மாத காலத்திற்குள் வழக்கு முடிவு பெற்றால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. ஆனால், காவல்துறையும் குற்றவாளிகளும் சேர்ந்துகொண்டு வழக்குகளை பல ஆண்டுகள் நீட்டித்த காரணத்தினாலே குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றனர்.

குற்றவாளிகள் தப்பிப்பதே சாதிய வன்மம் நடக்க காரணம், எனவே மூன்று மாதத்திற்குள் வழக்கை முடித்து, குற்றவாளிகளுக்கு மிக அதிகப்பட்ச தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த குடும்பத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் நிவாரணம், இரண்டு பெண்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும், சாதிய வன்முறைகள், வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : ’உர விலை ஏற்றத்தால் செய்வதறியாது நிற்கிறோம்’ - விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.