ETV Bharat / state

காதல் திருமணத்தால் முன்பகை: சண்டையை தடுக்க சென்ற முதியவர் உயிரிழப்பு; உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!

author img

By

Published : Jul 2, 2021, 7:14 AM IST

death
death

சண்டையை தடுக்க சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உயிரிழந்த முதியவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுகுமாரன் - பாலம்மாள். இந்தத் தம்பதியின் மகள் புவனேஸ்வரி. இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முத்துராமலிங்கம் - சுசிலா தம்பதியின் மகன் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இன்றி இருந்துள்ளனர். ராஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ராஜாவின் தாயார் சுசிலா நென்மேனியில் உள்ள ராமமூர்த்தி (57) என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார். இதையறிந்து அங்கு வந்த புவனேஸ்வரியின் பெற்றோர், அவரது உறவினர்கள் சுசீலாவிடம் சண்டையிட்டனர்.

death
உயிரிழந்த ராமமூர்த்தி

இந்தச் சண்டையை தடுக்க ராமமூர்த்தி முயன்றார். இதில் ராமமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புவனேஸ்வரியின் பெற்றோர் அவரை பிடித்து கீழே தள்ளினர். இதில் ராமமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராமமூர்த்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சுகுமாரனை கைது செய்து பரமக்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சுகுமாரன் குடும்பத்தினர் சேர்ந்து தாக்கியதில் ராமமூர்த்தி உயிரிழந்த நிலையில், சுகுமாரன் மீது மட்டும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர்.

ராமமூர்த்தி உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு: காவலர்களுக்குப் பிணை மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.