ETV Bharat / state

தொல்லியல் தடயங்களை கண்டறிய மாணவர்கள் உதவ வேண்டும்: ஆய்வாளர்கள் வேண்டுகோள்

author img

By

Published : Jul 5, 2023, 11:01 PM IST

archaeology
தொல்லியல் தடயங்கள்

தொல்லியல் பற்றி அறிந்துகொண்ட மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அழிந்து போகும் நிலையில் உள்ள தொல்லியல் இடங்கள், சின்னங்களை கண்டறிந்து பாதுகாக்க உதவவேண்டும் என தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்: நயினார்கோயில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிய வேண்டும் எனவும் அதனை பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக நயினார்கோயில் வட்டாரத்திலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு மற்றுமொரு வட்டாரக் கல்வி அலுவலர் க.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.உமாதேவி அனைவரையும் வரவேற்றார். மேலும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு, பள்ளி மாணவர்களிடையே தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொல்பொருட்களின் அவசியம் குறித்து கற்றுத்தரவும் தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சியை அளித்து வருகிறது.

தொல்லியல் பற்றி அறிந்துகொண்ட மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அழிந்து போகும் நிலையில் உள்ள தொல்லியல் இடங்கள், சின்னங்களை கண்டறிந்து பாதுகாக்க உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சி முடிவில் தேர்த்தங்கால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.நாகலெட்சுமி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வை பார்வையிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அனைத்துப் பள்ளிகளிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், நடந்த தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடிமங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

இதையும் படிங்க:8-ஆம் வகுப்பிலேயே எழுத்தாளர்.. கலைத்துறையில் கலக்கும் அரசு பள்ளி மாணவி மோனிகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.