ETV Bharat / state

வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிப்பதற்கு மத்திய அரசு தயங்குவது ஏன்? - எம்.பி திருநாவுக்கரசர் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 5:27 PM IST

Thirunavukkarasar MP
திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

Thirunavukkarasar MP: இவ்வளவு சதவீதம் பாதிப்பு இருந்தால்தான் தேசியப் பேரிடராக அறிவிக்க முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், இன்று புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அமோனியம் வாயுக்கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இது போன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இதுபோன்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை இது போன்று நடந்துள்ளது. கஜா புயலின்போது தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. தற்போது புயல், வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிப்பதற்குத் தயங்குவது ஏன்? இவ்வளவு சதவீதம் பாதிப்பு இருந்தால்தான் தேசிய பேரிடராக அறிவிக்க முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது, அரசு நினைத்தால் அறிவிக்கலாம்.

தேசியப் பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தர்க்கம் பண்ணுவது சரியல்ல, ஏட்டிக்குப் போட்டி என்று இல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டில் பொன்முடி, தண்டனை பெற்ற முதல் நபர் கிடையாது. பாரபட்சம் இல்லாமல் விசாரணை செய்து, உண்மையாக ஊழல் செய்திருந்தால் தண்டிக்கலாம். ஆனால், இந்த சம்பவம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, ஊழல் செய்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், இந்தி குறித்து நிதிஷ்குமார் கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசும்போது, அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும், ஆங்கிலத்தில் பேசலாம் என்று ஒரு சிலர் கூறியதாகவும், அதற்கு நிதீஷ் குமார் பேச்சுவாக்கில் இந்தி கற்றுக் கொண்டால் என்ன என்று கூறினார். அதை பலர் பெரிதாக்கி விட்டனர்.

உதயநிதி கூறும் கருத்து குறித்து, அதில்தான் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். அவரைப் பேசக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றவாளிகளை அரசு விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த மாவட்டம் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க செல்வதில் தவறில்லை. ஆனால் அங்கு சென்று அவர் ஆளுநர் போன்று பேசியிருக்க வேண்டும். அரசியல்வாதி போன்று பேசியது தவறு. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் செல்பவர்கள் செல்லலாம். யாரும் தடுக்கப் போவது கிடையாது. ராமர் கோயில் கட்டி ஆகிவிட்டது. திறக்கப் போகிறார்கள், ராமரைக் கும்பிட மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. அனைத்து மதத்தினரையும், கடவுளையும் நாங்கள் வழிபடுவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இயல்பை விட 4 சதவீத அதிக மழைப்பொழிவு.. தென் மாவட்டங்களுக்கு அடுத்த எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.