ETV Bharat / state

தமிழகத்தில் இயல்பை விட 4 சதவீத அதிக மழைப்பொழிவு.. தென் மாவட்டங்களுக்கு அடுத்த எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 3:06 PM IST

chance of heavy rain again in southern districts
மீண்டும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Heavy Rain Warning for TN: மீண்டும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.

வடகிழக்கு பருவமழை: வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவு 455.3 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 437.1மி.மீ ஆகும். இது இயல்பை விட 4 சதவிகிதம் அதிகம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: டிச.28ஆம் தேதி அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29ஆம் தேதி அன்று குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு: கோரமண்டல் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.