ETV Bharat / state

நிலவு, செவ்வாய் குறித்த ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை

author img

By

Published : Mar 10, 2023, 3:57 PM IST

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

நிலவு, செவ்வாய் குறித்த ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகள் இனி கூட்டாக செயல்பட வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் தமிழ் வழியில் செயல்படும் தாய் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 25ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்விதான் தனி மனிதனுடைய உயர்வுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று. அந்தக் கல்வி தாய் மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். தமிழை தாய்மொழியாக பெற்றுள்ள நாம் தாய்மொழியில் படிக்கும் போது, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக மிளர முடியும் என்பது எனது நம்பிக்கை.

தாய்ப்பால் குடித்த குழந்தைகள் உடல் நிலை சிறப்பாக, ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக சொல்கின்றனர். அதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்க்கையில் சிறப்பாக செல்ல வேண்டும்.போட்டிகளில் முன்னேற வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வி தாய்மொழி கல்வியாக தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஊடக மொழி தான் .

இன்னொருவருடன் பேசும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை பின்னால் வைத்துக் கொள்ளலாம். என்னை வெளிப்படுத்தத்தான் ஆடை; ஆடையாக நான் இல்லை. அந்த வகையில் நான் நானாக இருக்க வேண்டும் என்றால் சுயமாக என்னுடைய முகவரி, என்னுடைய அடையாளம் என்ற போது அது தாய் மொழி தான் வரும். சுய சிந்தனை தான் முக்கியம். சிந்தித்த பிறகு அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துங்கள்.அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சிந்திப்பது கட்டாயம் தாய்மொழியாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.

இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கக்கூடிய நாள் சீக்கிரம் வர வேண்டும். ககன்யான், சந்திரயான்-3 என்ற இரண்டு தொழில்நுட்பங்களையும் நாம் அடைய வேண்டும். இனி வரும் காலங்களில் நிலவு, செவ்வாய் குறித்த மனித ஆராய்ச்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பை நாடிச்செல்வது அவசியம். இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு மிகுந்த பொருட்செலவு செய்ய வேண்டிய கட்டயாம் உள்ளது. சந்திரயான் திட்டம் நம் தலைமையில் நடைபெற்றாலும், இந்தியாவுடன் பல நாடுகள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டன. நிலவு, செவ்வாய் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா,ரஷ்யா,ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட முன்னணி நாடுகள் கூட்டாக செயல்பட்டால் மனித குலத்துக்கு சிறப்பாக இருக்கும்.

புவி வெப்பமயமாவதை தடுப்பது நம் கையில் தான் உள்ளது. மாசுக்கட்டுப்பாடுகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். முடிந்த வரை புவி வெப்பமயமாவதை கட்டுப்படுத்தும் நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்" என கூறினார்.

இதையும் படிங்க: குரங்கணி தீ விபத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் : தவறிழைத்தது யார்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.