ETV Bharat / state

ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. நைஜீரியா, பிரேசிலைச் சேர்ந்த 4 பேர் கைது! - Seizure of drugs

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 10:05 PM IST

Drugs Seized: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய போதைப்பெருட்களை மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட புகைப்படம்
போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

சென்னை: சென்னைக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள என்.சி.பி எனப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, என்.சி.பி தனிப்படையினர் சாதாரண உடைகளில், சென்னை விமான நிலையத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் மூலம் வந்த பார்சல் ஒன்றை, என்.சி.பி அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றி சோதனை நடத்தினர். அந்த பார்சலில் 1.4 கிலோ போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து அந்தப் பார்சலில் இருந்த முகவரியின் படி, புதுச்சேரி மற்றும் பெங்களூரில் இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்து, அவரிடம் இருந்து 15 கிராம் கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்த நைஜீரிய நாட்டு இளம்பெண் உட்பட இரண்டு பேரை பிடித்து என்.சி.பி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அந்த நைஜீரியப் பெண் அணிந்திருந்த ஆடைக்குள் 1.8 கிலோ கோக்கைன் போதைப்பொருள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், என்.சி.பி அதிகாரிகள் மொத்தம் ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிரேசில் மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த 4 பேர், இந்தியர் ஒருவர் என மொத்தம் 5 பேரை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தோனியின் இறுதிப்போட்டி சென்னையில் நடக்க மற்ற அணிகள் என்ன செய்ய வேண்டும்? - Ipl Playoff Chances

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.