ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே ரூ.28 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது

author img

By

Published : Feb 24, 2023, 7:46 AM IST

Etv Bharat
Etv Bharat

வாடிக்கையாளர்களின் பெயரில் போலி கடன் வழங்கி ரூ.28 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி ரூ.28 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று (பிப்.23) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சரவணன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கால்நடை கடன், கரும்பு பயிர் கடன், சேமிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி அதனை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவர் வங்கி எண்ணுக்கு பண பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சிலர் வங்கி நிர்வாகத்திற்கு அளித்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி நிர்வாகம் சிறப்பு தணிக்கை செய்தபோது, மேலாளர் சரவணன் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து புதுநகர் இந்தியன் வங்கி கிளையின் புதியதாக பொறுப்பேற்ற மேலாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட குற்ற தடுப்பு பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வாறு வங்கி மேலாளர் ஒருவரே வாடிக்கையாளரின் பெயரில் போலியாக கடன் வழங்குவது போல் 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் வரையில் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'வாகன ஓட்டிகளே உஷார்- பார்க்கிங்கில் 2 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் கட்டாயம்- போக்குவரத்து காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.