ETV Bharat / state

அண்ணாமலை பேச்சு ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம்: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்!

author img

By

Published : Jun 15, 2023, 11:20 AM IST

பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை:எம்பி திருநாவுக்கரசர்
பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை:எம்பி திருநாவுக்கரசர்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகளில் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊழல் தடுக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்தல்ல, ஆனால் பாஜக அரசு கர்நாடகாவில் இருந்த போது 40 சதவீத ஊழல் ஆட்சி இருந்தது. பின்னர், மக்களால் அந்த ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது சோதனை நடந்ததா? யாராவது கைது செய்தார்களா? பாஜக ஆளும்‌ மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜக அல்லது பாஜக ஆதரவு இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களை முடக்குகின்ற விதத்திலும். மக்கள் தேர்ந்தெடுத்தாலும், ஆட்சியை மாற்றி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பது அல்லது ஆளுபவர்களுக்கு இடையூறு கொடுக்கும் வேலையை பாஜக நன்றாக செய்கிறது. இது அராஜகத்திற்குறியது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து: அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டு இருந்தால் பாஜக ஆளுகின்ற மாநிலத்திலும் இது போன்ற சோதனை நடத்தி இருக்கும், கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கும்.செந்தில் பாலாஜி கைது விவகாரம் எதிரொலியாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் வராது. மக்கள் பழிவாங்கும் நடவடிக்கை தான் இது என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இது எந்த விதத்திலும் தேர்தலின் போது எதிரொலிக்காது எனவும் குறிப்பிட்டார்.

பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை குறித்து: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை, அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சியினுடைய பிரதான தலைவரை பேசினால் அதிமுகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் அவர்களும் பதிலுக்கு பேச தான் செய்வார்கள். அண்ணாமலை
நிதானமாக செயல்படவில்லை என்றார்.

இவ்வளவு தூரம் அண்ணாமலை பேசிய பிறகும் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டுமா என்பதை அதிமுக தான் பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நான் எந்த கருத்தும் கூற முடியாது.பாஜக அண்ணாமலை வைத்து டெக்னிக்காக அதிமுகவியே அடிபணிய வைக்கிறதா என்றும் அமித்ஷாவின் அனுமதியோடுதான் அண்ணாமலை பேசுகிறாரா இதெல்லாம் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள் என்வும் கூறினார்.

பின்னர்,காங்கிரஸ் குறித்து பேசிய அவர், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாற்றுவது டெல்லி தலைமை எடுக்கவேண்டிய முடிவு. தேசிய கட்சிகளுக்கு மாநிலத்தில் நிரந்தர தலைவர்கள் என்பது இல்லை, டெல்லி தலைமை இப்போது இருப்பவரை தலைவராக இருப்பார் என்று அறிவித்தால் அவருடன் இணைந்து பணி செய்வேன், தனக்கு வாய்ப்பு கொடுத்தால் பாடுபட தயாராக உள்ளேன் அல்லது வேறு யாருக்கும் கொடுத்தார்கள் என்றால் அவருடன் சேர்ந்து பணியாற்றவும் பாடுபடவும் தயாராக உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க:டைமிங் ரொம்ப முக்கியம்.. பார் ஒப்பனுக்கு காத்திருந்த மது பிரியர்கள்.. புதுக்கோட்டை வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.