ETV Bharat / state

டைமிங் ரொம்ப முக்கியம்.. பார் ஒப்பனுக்கு காத்திருந்த மது பிரியர்கள்.. புதுக்கோட்டை வைரல் வீடியோ!

author img

By

Published : Jun 15, 2023, 9:00 AM IST

புதுக்கோட்டையில் தனியார் மதுபான பார் திறப்பதற்கு முன்பே காலையிலேயே மது பிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், 11 மணிக்கு பார் திறந்தவுடன் முண்டியடித்த படி உள்ளே சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுபான கூடம் திறக்கும் முன்பே குவிந்த மது பிரியர்கள்
மதுபான கூடம் திறக்கும் முன்பே குவிந்த மது பிரியர்கள்

மதுபான கூடம் திறக்கும் முன்பே குவிந்த மது பிரியர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி செயல்பட்ட 18 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளச் சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 மணி நேர மது விற்பனை குறைந்து உள்ளது. இதனால் புதுக்கோட்டையின் நகர் பகுதியிலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது விற்பனையும் சற்று குறைந்து உள்ளது. மது பிரியர்கள் அரசு மதுபான கடை திறக்கப்படும் நேரமான பகல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், புதுக்கோட்டை, டிவிஎஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது. அரசு மதுபான கடை திறக்கப்படும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தனியார் மதுபான கடை திறக்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் காலையிலிருந்து தனியார் மதுபானக் கூடம் முன்பு குவியத் தொடங்குகின்றனர்.

மேலும், பகல் 11 மணியை நெருங்கும் வரை காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி 11 மணி நெருங்கும் போது தனியார் மதுபானக் கூடத்தின் முன் கதவை தட்டிக் கொண்டும், சப்தமிட்டுக் கொண்டும் மது பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

மது பிரியர்கள், சரியாக 11 மணிக்கு மதுபானக் கூடத்தின் கதவு திறந்தவுடன் கடவுளை தரிசனம் செய்வதுப் போல முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். மேலும் மது பிரியர்களின் இத்தகைய செயல் காண்போரை அதிர்ச்சி அடையவும், வேதனை அடையவும் செய்து உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் காலை 5 மணி, 6 மணிக்கெல்லாம் மதுபானத்தை வாங்கி குடித்து தன்னையும் பாழ்படுத்தி தங்களது குடும்பத்தையும் கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லாமல் காலை 8 மணி அளவில் முழு போதையில் சாலையில் கிடக்கும் மது பிரியர்களையும் காண முடிகிறது.

இன்னும் குறிப்பாக சில தினங்களுக்கு முன் ஆம்பூரில் மதுவுக்கு அடிமையான தந்தையை, திருத்தும் முயற்சியில் தோல்வி அடைந்த மாணவி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நமக்கு ஒரு பாடத்தை கற்பித்தாலும், மதுபான கூடத்தில் இது போன்ற நிறைந்த கூட்டத்தை பார்க்கையில் விஷ்ணு பிரியாவின் தற்கொலை அர்த்தமற்று போவதாக இந்த வீடியோவை பதிவிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Pudukkottai Bus Stand: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.