புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குடிபோதையில் முகமது, அபுதாகிர் ஆகிய இருவரும் சொத்துத் தகராறில் ஈடுபட்டுள்ளதாக அறந்தாங்கி சோதனை சாவடியில் பணியிலிருந்த பெண் காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெண் காவலர், அங்கு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருந்தவர்களிடம் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது பெண் காவலர் ஒருவரை அபுதாகிர் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாது, அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனையடுத்து அந்தக் காவலர், காவல் துறையில் புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அபுதாகிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அறந்தாங்கி பகுதியில் காவலர்களை தாக்குவது தொடர் கதையாகி வருவதாகவும், இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல் உயர் அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.