ETV Bharat / state

மனநோயாளியாக விஜயபாஸ்கர் மாறி இருக்கிறார் - அமைச்சர் ரகுபதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 5:13 PM IST

Law Minister Regupathy interview in Pudukkottai
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

Law Minister Regupathy: புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, மனநோயாளியாக விஜயபாஸ்கர் மாறி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே 2 கோடி ரூபாய் மதிப்பில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்த பின்னர் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

அமைச்சரை பதவி நீக்கவோ, பதவியில் இருந்து எடுக்கவோ முதலமைச்சருக்குதான் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, ஏற்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது, எனவே இது வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்கட்சி எம்எல்ஏக்கள் மனு அளித்தால், அதனை விஜயபாஸ்கர் திட்டமிட்டே அந்தப் பகுதிகளுக்கு அனுமதி மறுத்து வந்தார். அவர் தற்போது அரசியல் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். தற்போதைய ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக பாரபட்சம் இன்றி நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி முறையாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கரோனாவை காரணம் காட்டி நிதி ஒதுக்கீடு செய்யாத சூழலிலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், அந்த கல்லூரி செயல்படவில்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மன நோயாளியாக விஜயபாஸ்கர் மாறி வருகிறார். அவர் செயல்பாடுகள் அப்படித்தான் காட்டுகிறது. அவரது குடும்பத்தினர் அவருக்குத் தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும். திருச்சியில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மத்திய அரசு விழா இருப்பதால், அவர்கள் அழைப்பிதழை பாஜகவிற்கு மட்டும் அனுப்பி உள்ளதால், திமுகவினர் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.

இதனால் பாஜகவினர் அந்த விழாவில் முதல்வர் பேசும்போது கூச்சல் இட்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக உறுப்பினர்கள்தான் மொத்த உறுப்பினர்களே. தமிழகத்தில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே பாஜகவில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.