திருவண்ணாமலை மேல்மா சிப்காட் விவகாரம்; விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 3:43 PM IST

Updated : Jan 5, 2024, 4:06 PM IST

tamil nadu govt cancelled Goondas Act against farmer Arul on Tiruvannamalai Melma sipcot issue

Farmer Arul Goondas Case: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா சிப்காட் விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளில் ஒருவரான அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 2023ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி விவசாயிகள் தடையை மீறி பேரணியாகச் சென்றனர். அப்போது, வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியும், வேளாண் உரிமை செயற்பாட்டாளருமான அருள் ஆறுமுகம் உள்பட ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பின்னர், விவசாயி அருள் மட்டும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துள்ள மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, பாகுபாட்டோடு பொய் வழக்குப் பதிவு செய்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தரப்பில், “திருவண்ணாமலை மேல்மா சிப்காட் பணிக்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்ததோடு, குறிப்பாக 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் 2023 நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்தது.

பின்னர் சிறிது நாட்களில் 6 நபர்கள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்தது, தமிழ்நாடு அரசு. ஆனால் கடந்த ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து போராடிய விவசாயி அருள் என்பவர் மீதான குண்டாஸ் வழக்கு மட்டும் ரத்து செய்யப்படவில்லை.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று (ஜன. 04) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், இன்று (ஜன. 05) அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நன்றி தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழ்நாடு அரசும், அரசு அதிகாரிகளும் விவசாயிகள் மீது பாகுபாட்டோடு நடந்து கொண்டதை இவ்வழக்கு எடுத்துக் காட்டுகிறது.

சமூக நீதி பேசும் திமுக அரசு, இது போன்ற பாகுபாட்டினை காட்டும் என்பதனை மனித உரிமைக் காப்பாளர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீதான தவறான நடவடிக்கைக்கு காரணமாக இருந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் சொந்த பணத்தில் இழப்பீட்டுத் தொகையும், பின்புலமாக பொய் வழக்குகள் பதிவு செய்யக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகள் மீதான பொய் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Last Updated :Jan 5, 2024, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.