பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் நிலை கண்காணிப்புக் குழுவினர், பெரம்பலூர் கனிமம், சுரங்கத் துறை துணை வட்டாட்சியர் பாக்கியராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், காவலருடன் கோனேரிப்பாளையம் அடுத்துள்ள நான்கு ரோடு சந்திப்பில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
வாகனத் தணிக்கை
அப்போது, காரில் வந்த குரும்பலூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரை வழிமறித்து சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.
இதேபோன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் சிவகுமார், சுரேஷ், சாந்தி ஆகியோர் முன்னிலையில், செட்டிகுளம் விராலிப்பட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குவந்த செங்காட்டுபட்டியைச் சேர்ந்த விஜய் என்பவர் காரில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.
பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய இரண்டு வட்டாரப் பகுதியில் பறிமுதல்செய்யப்பட்ட மூன்று லட்சத்து எட்டாயிரத்து 100 ரூபாயை பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டப்பேரவைத்தொகுதி தேர்தல் அலுவலர் பத்மஜாவிடம் ஒப்படைத்தனர்.