ETV Bharat / state

தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூரில் ‘கல்வியும் காவலும்’ திட்டம் அறிமுகம்!

author img

By

Published : Jun 25, 2023, 12:37 PM IST

Updated : Jun 25, 2023, 1:00 PM IST

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு

தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூரில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காவல் துறை சார்பில் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் விதமாக ‘கல்வியும் காவலும்’ எனும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு

பெரம்பலூர்: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காவல் துறையில் "கல்வியும் காவலும்" என்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒவ்வொரு காவலரின் பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய நகர காவல்நிலையம் அழைத்துவரப்பட்டனர். காவல் துறையில் செயல்படும் பிரிவுகள் சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் பணி மற்றும் அவர்களின் பொறுப்புகள் ஆகியவை குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மற்றும் துறை சார்ந்த காவலர்களும் எடுத்துரைத்தனர்.

மேலும், காவல் துறையில் இயங்கும் விரல் ரேகை பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு மற்றும் காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர்.

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு

பின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, தொடுதல் குறித்த விழிப்புணர்வு குறித்தும், மாணவிகள் எதற்கும் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை பெற்றோர்களிடம் சொல்லாமல் இருக்க கூடாது என்றும்; அப்படி சொல்ல முடியாத சூழ்நிலையில் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்வு

மேலும் பேசிய அவர், ''மாணவர்களுக்காக கடமையாற்ற காவல்துறை எப்போதும் காத்திருக்கிறது என்று கூறினார். மாணவிகளும் ஆர்வமுடன் போலீசார் கூறியதை கேட்டுத் தெரிந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை மக்களின் நண்பன் என்பதை உணர்த்துவதற்கும், காவல் துறையினரின் அன்றாடச் செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவ மாணவிகள் அறிந்து கொள்வதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த ''கல்வியும் காவலும்'' திட்டத்தின் கீழ் காவல் நிலையங்களுக்கு மாணவ மாணவிகளை வரவழைத்து மேற்படி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளது என்றும், மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், அந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு காவல் கண்காணிப்பாளரால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்'' என்றும் கூறினார்.

இந்த ‘கல்வியும் காவலும்’ திட்டத்தில் சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், வேலுமணி, துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி, காவல் ஆய்வாளர்கள் வெங்கடேசுவரன், விஜயலட்சுமி மற்றும் போதை மற்றும் மனநல மருத்துவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியவர் கருணாநிதி - எ.வ.வேலு பெருமிதம்

Last Updated :Jun 25, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.